பிள்ளையார் சுழி! எஸ்.ஐ. பரமசிவம் அண்ணே! நீங்கள் பெரிய இடத்திற்கு போவீங்க! தாடி பாலாஜி பாராட்டு
சென்னை: பரமசிவம் அண்ணே! நீங்கள் பெரிய இடத்திற்கு போவீங்க என நடிகர் தாடி பாலாஜி பாராட்டி வீடியோ பதிவை போட்டுள்ளார்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி பழங்குடியின மக்களிடையே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் சென்றார். அங்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத மக்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசும் போது, யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னை ஸ்டேஷனில் வந்து பார்ககலாம். பள்ளிக் கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். 5 நாட்கள் பள்ளியில் முட்டையும் 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் படிக்க யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன். மத்திய அரசின் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீள் பெண் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி கொடுக்க வேண்டும். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்தான் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூடநம்பிக்கையால் மாட்டிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் இங்கிருந்து என்னை அழைத்தாலும் ஸ்டேஷனில் கேட்கும். நான் வருகிறேன். இவ்வாறு எஸ்ஐ பரமசிவம் பேசினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் முதல்வர் ஸ்டாலின், பரமசிவம் எஸ்ஐயை பாராட்டினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தாடி பாலாஜி வீடியோவில் கூறியிருப்பதாவது: ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நான்தான் தாடி பாலாஜி பேசுறேன். நான் ஒரு நிகழ்வு குறித்து கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை நிறைய பேர் பள்ளிக்கு அனுப்பாமல் அப்படியே வீட்டில் வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.
பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியம். இதை நிறைய பேர் சொல்கிறார்கள். இதற்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் பென்னாலூர்பேட்டை பயிற்சி உதவி ஆய்வாளர் பரமசிவம். இந்த தொழிலை அவர் எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது தெரிகிறது. அவர் செய்த இந்த காரியத்திற்காக அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு என்னவென கேட்டீர்களேயானால், தமிழக முதல்வர் ஸ்டாலின், பரமசிவத்தை பாராட்டியுள்ளார்.
இதை கேள்விப்பட்டதும் எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. பரமசிவம் அண்ணே நீங்கள் இன்னும் வாழ்க்கையில் அடுத்தடுத்த இடத்திற்கு போக எனது வாழ்த்துகள். முடிந்தால் விரைவில் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். வணக்கம் என தாடி பாலாஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications