இங்கயும் வந்துட்டாருயா... குழந்தைகளையும் விட்டுவைக்காத வடிவேலு... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்...!
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தமிழ் எழுத்துக்களை வடிவேலு மூலம் அறிமுகம் செய்யும் மீம் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
ஏதாவது விஷேஷமா? போட்ரா மீம்மா... ஏதாவது புதுப்படம் ரிலீஸா .. கொண்டாடனுமா? இருக்கவே இருக்கு மீம்... பொழுதுபோகலையா.. ஏதாவது மீம் பாப்போம்... கொரோனா வந்துருச்சா... மீம் போடுவோம்... இப்படி அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் வெளி வரும் மீம்கள்-தான் இளைய தலைமுறையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முக்கியக் காரணம். அப்படி வெளிவரும் மீம்களில் 90% இடம்பெறுவது வடிவேலுவின் புகைப்படங்கள் தான். இவ்வளவு ஏன், பெரும் அரசியல் தலைவர்களை பகடி செய்ய வேண்டும் என்றாலும் சரி, சோகத்தில் இருக்கும் மனதில் சிரிப்பை வரவழைக்க வேண்டும் என்றாலும் சரி, வடிவேலுவால் செய்ய முடியும். ஆனால் இப்போது வடிவேலுவை கொண்டு உருவாக்கப்படும் மீம்களாலும் முடியும். இன்னும் சொல்லப்போனால் மீம் கிரியேட்டர்களின் குலதெய்வம் என்றும் வடிவேலுவை அழைக்கலாம்.
பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு இன்ப, துன்பங்களுக்கும் காட்சிகள் நடித்து வைத்துள்ளார் வடிவேலு. இன்னும் சொல்லப்போனால் நமது அன்றாட நாட்கள் கூட வடிவேலுவின் வார்த்தைகளும், பேச்சுகளும் இல்லாமல் நிறைவுபெறாது. குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டு போகனுமா இந்த டெம்ப்ளேட், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமா இந்தா டெம்ப்ளேட், குழந்தைகள் டார்ச்சர் செய்கிறார்களா இந்தா டெம்ப்ளேட் என்று அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாய் வலம் வரும் வடிவேலுவின் வெவ்வேறு முகபாவங்களை கொண்டு இப்போது இன்னொரு மீம் வெளியாகி சமூக வலைதளங்களில் சக்கைபோடு போட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் எல்கேஜி, யுகேஜி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவலால் பள்ளியில் சேர்க்கப்படாமல் இருந்த ஏராளமான குழந்தைகள் இன்று முதல் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில், தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களான அ முதல் ஒள வரை வடிவேலுவின் முகபாவத்தைக் கொண்டு எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மீம் அனைவருக்கும் சிரிப்பை வரவழைப்பதோடு, உயிர் எழுத்துக்களை கற்பிக்கும் வகையில் மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக உள்ள நடிகர் வடிவேலு, சிரிப்பை வரவழைப்பதோடு, இப்போது மீம்களின் வழியாக குழந்தைகளுக்கு பாடமும் எடுக்கிறார் என சிலர் சிலாகித்து வருகின்றனர். இதேபோல் பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர்கள் கவலைப்படுவது, பள்ளிக்கு ஜாலியால செல்வது, ஆசிரியர்களின் நிலை என அனைத்து சூழல்களுக்கும் வடிவேலு மூலம் மீம்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.