கேப்டனுக்கு துரோகம்..புறக்கணித்த அஜித்! வடிவேலுவின் வாய் ராசி..திமுக ஆட்சி போயிரும்! விளாசிய பிரபலம்
சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் மேடையில் தோன்றிய நடிகர் வடிவேலு, திமுக 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 200 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என பேசினார். இந்த நிலையில் வடிவேலுவை ஓரங்கட்டுவது நல்லது எனவும், அவரது வாய் ராசியால் மீண்டும் திமுக தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு என விமர்சித்து பேசியுள்ளார் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலு, அதற்குப் பிறகு சினிமா துறையில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் மேடையில் தோன்றினார் வடிவேலு. சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். குறிப்பாக," வலிமையான தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என முதல்வர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் நெகிழ வைத்திருக்கிறது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இது தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என பேசி இருந்தார். தொடர்ந்து அவரது பேச்சு சமூக வலைதளங்களில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது..
இந்த நிலையில் திமுக மீண்டும் தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு என விமர்சித்துள்ளார் பிரபல திரைப்பட விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," இம்சை அரசனுக்கு மீண்டும் முளைத்த அரசியல் கொடுக்கு: இவர் காமடியாக பேசினால் வாக்குகள் விழும் என நம்பிய திமுக.. அப்போது தோல்வியை அடைந்தது. சின்னக் கவுண்டர் படத்தில் அரை டஜன் ஆடைகள் மற்றும் பணம் தந்து உதவினார் கேப்டன்.. பிறகு பல படங்களில் தன்னுடன் நடிக்க வைத்து வளர்த்து விட்டார்.
வீட்டருகே நடந்த சாதாரண பார்க்கிங் பிரச்னையை மனதில் கொண்டு விஜயகாந்தை குடிகாரர் என மட்டம் தட்டி திமுக மேடையில் பேசினார் வடிவேலு. திமுகவின் பிரதான எதிரி ஜெயலலிதாவை விமர்சித்தால் டங்குவார் கிழிந்துவிடும் என்பதால்.. தனது பர்சனல் பகையை தீர்க்க கேப்டனை மட்டும் வசைபாடினார். ஆனால் இவரை கண்டுகொள்ளாமல்.. லூஸில் விட்டார் விஜயகாந்த். வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என சொன்னவர் விஜயகாந்த்.
ஜெயலலிதா முதல்வரான பிறகு.. அரசியலில் காணாமல் போனார். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது.. அக்கட்சிக்காக பேசமாட்டார். ஆளுங்கட்சியாக இருந்தால்..தேர்தல் நேரத்தில் மட்டும் சுய ஆதாயத்திற்காக திமுக மேடைகளில் தலையை காட்டுவார். தன்னை ஒருமையில் பேசி கிண்டல் செய்ததால் 'ராஜா' எனும் படத்தோடு இவரை நிரந்தரமாக புறக்கணித்து விட்டார் அஜித். அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெற விரும்பும் திமுக..வடிவேலுவை மேடையேற்றுவது முரண்
அன்று ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று மோடியையும் எதிர்க்க மாட்டார். திமுகவை அரசியல் எதிரி எனக்கூறும் விஜய்யை எதிர்த்தால் இவரது டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஆகவே.. அரண்மனை புலவர் போல முதல்வரை பாராட்டி பேசி..பொற்கிழி வாங்குவதோடு சரி. சினிமாவில் இவரது காமெடி எடுபடாமல் போய் பல வருடங்களாகி விட்டது. பிரச்சாரத்தில் எப்படி எடுபடும்?
தன்னுடன் பல வருடங்கள் இணைந்து நடித்த துணை நடிகர்கள் பலரின் கஷ்டத்திலும் உதவாத, அவர்களின் இறப்பிற்கும் செல்லாத. இவரால் மக்களுக்கு என்ன பயன்? மாமன்னன் படத்தில் நடித்ததோடு இவரது சகவாசத்தை...உதயநிதி நிறுத்தியிருக்க வேண்டும். திமுக எனும் கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை விட்ட கதைதான் இது. இவரது வாய் ராசியால் மீண்டும் திமுக தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு." என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications