எவ்வளவோ பண்ணிட்டோம்.. ‘இதை’ பண்ண மாட்டோமா? பனையூரில் ஆஜரான தவெக தலைகள்..விஜய் போட்ட முக்கிய ஆர்டர்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்க வேண்டும் என காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஆன விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருபுறம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது. இதை அடுத்து அவரது ரசிகர்கள் படத்தை வரவேற்க உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்
இது ஒருபுறம் இருக்க அவரது அரசியல் வருகையும் செப்டம்பர் மாதம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறது. செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர.
மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்க விஜய் கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கி வருவது வழக்கம் தான். கட்சியின் கொடி வெளியிட்ட போதே பல்வேறு சிக்கல்கள் வந்தது. கொடி தொடர்பாகவே தேர்தல் ஆணையத்திலும் தற்போது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் இருந்து எவ்வளவு பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள்? என கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? எத்தனை இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது? பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? மாநாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையின் அளவுகள் என்னென்ன? மேடையில் மொத்தம் எத்தனை இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது? உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த கடிதத்துக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை கேட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பதில் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் தான் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மாநாட்டுக்கு இன்னும் என்னென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள பதில்களுக்கு விஜய் ஒப்புதல் அளித்த நிலையில், நாளை அந்த பதில் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் மாநாடு நிச்சயம் நடக்கும் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளை செய்யுமாறு நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே ராகுல் காந்தி மாநாட்டில் கலந்து கொள்வதாக வெளிய தகவல் வெளியான நிலையில் அதனை காங்கிரஸ் கட்சியும் தமிழக வெற்றி கழகத்தினரும் மறுத்தனர். இந்த நிலையில் ராகுல் காந்தி தவிர்த்து பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், சில மாநில முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications