நடிகர் விஜய்-க்கு 'Y' பாதுகாப்பு-'ரஜினிகாந்த் ரசிகர்களின் முட்டை வீச்சு தாக்குதல் சதி' ஆடியோ காரணமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு மத்திய அரசு திடீரென 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அண்மையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பேசிய ஆடியோ வெளியானதும் விஜய்-க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த்- விஜய் இருவருக்கும் இடையே நீண்டகாலம் பனிப்போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'சூப்பர் ஸ்டார்' பட்டம் யாருக்கு என்பதுதான் இந்த பனிப்போரின் மையமாகும். இதனை முன்வைத்து ரஜினிகாந்தும் மேடைகளில் கதைகளை சொல்லி அவருக்கு பதிலடியாக நடிகர் விஜய்யும் குட்டிக் கதைகள் சொல்ல இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து 'ரத்த களறி'யை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

விஜய் மீது அழுகிய முட்டை வீசி தாக்குதல் நடத்த ரஜினி ரசிகர்கள் சதி
இதன் உச்சமாகத்தான் அண்மையில், நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்த மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது 'அழுகிய முட்டைகளை வீசி' தாக்குதல் நடத்துவோம் என ட்விட்டர் ஸ்பேஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பேசிய ஆடியோவும் வெளியானது. அந்த ஆடியோவில், மளிகை கடையில் ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்பனையாகிறது; நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அக்கவுண்ட் தொடங்குவோம்; நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலைக்கே முட்டைகளை வாங்குவோம்; அதுவும் அழுகிய முட்டை எனில் ரூ.1.50தான் வரும். விஜய் சுற்று பயணம் வரும் போது சரமாரியாக வீசுவோம் என இடம் பெற்றிருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்கள் மிக காட்டமான பதிலடியையும் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.
விஜய் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் கண்டனம்
மேலும் ரஜினிகாந்த் தரப்பில் ஒரு அறிக்கையும் வெளியானது. அந்த அறிக்கையில், சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை, மேலும் உண்மையான ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படிபட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள். ஊடகங்களும், சமூகவலைதளங்களும் இத்தகைய எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமே உருவாக்குகிறது.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அறிவுரை
அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல. ரசிகர் என்ற உணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது. நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழியில் செயல்படும் நாம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது, கூடாது. நாம் விரும்பும் நட்சத்திரங்களை நேசத்துடனும் நேர்மறை உணர்வுடனும் கொண்டாடுவோம். ரசிகர் பண்பாட்டை மரியாதை மற்றும் பெருமிதம் மட்டுமே நிர்ணயிக்கட்டும்-துவேஷம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீமானின் பணக் கொழுப்பு விமர்சனம் - திரள்நிதி திருடன் விமர்சனம்
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் ரசிகர்களின் இந்த மிரட்டல் பஞ்சாயத்து ஓய்வதற்குள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணக் கொழுப்பு இருப்பதால்தான் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளராக பயன்படுத்துகிறார் என விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் வெடித்தது. சீமானை திரள் நிதி திருடன் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விமர்சித்தனர்.
விஜய் 'Y' பிரிவு பாதுகாப்பு
இப்படி நடிகர் விஜய் சுற்றுப் பயணம் தொடங்குவதற்கு முன்னரே சரமாரியாக அச்சுறுத்தல்கள், விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்தன. இந்த நிலையில்தான் மத்திய அரசு திடீரன நடிகர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. தேர்தல் அரசியல் களத்தையே எதிர்கொள்ளாத ஒரு கட்சியின் தலைவர்தான் நடிகர் விஜய் என்ற போதும் அவரது சுற்றுப் பயணத்தின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும் இந்த Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications