திடீர்னு விஜய் ஆபீஸ் பக்கம் ரசிகர்கள் கூட்டம்.. காரில் விரைந்த விஜய்.. என்னாச்சு?
சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று நடிகர் விஜய் திடீரென ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தைப் போலவே நடிகர் விஜய்யை முன்வைத்து அரசியல் களம் அவ்வப்போது பரபரப்பாவது உண்டு. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், 2 மாதங்களுக்கு முன்னர் விஜய் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்யப் போய் இன்னும் பரபரப்பானது.

ஆனால் அதில் டிவிஸ்ட்டாக, என் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என தந்தை எஸ்.ஏ.சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தபோதும் எஸ்.ஏ.சி அவ்வப்போது தரும் பேட்டிகளில் விஜய் எதிர்காலம் கருதியே தான் செயல்படுகிறேன் என்றே கூறி வருகிறார்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் சென்னை அருகே பனையூரில் சப்தமே இல்லாமல் இயங்கி வருகிறது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகம். இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் ஒன்று இந்த அலுவலகத்தில் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். அப்போது நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.
விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ன கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்? என ஏகப்பட்ட கேள்விகளுடன் விஜய் காரில் அமர்ந்திருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications