எள்ளு வய பூக்கலையே..விஜய் என்ன பார்க்கலையே! பதவி கொடுக்காததால் சோகமான தாடி பாலாஜி! பரபர பாலிடிக்ஸ்.!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து ஓராண்டு நிறைவுடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கி இருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு முன்பு இருந்தே அவரது ஆதரவாளராக இருந்த நடிகர் சௌந்தரராஜன், விஜயின் முகத்தை பச்சை குத்திக் கொண்ட நடிகர் தாடி பாலாஜி ஆகியோருக்கு பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் உள்ளனர். மேலும் விஜயின் நண்பர்கள் சிலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

4 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தனியே நடைபெற்று வருகிறது.
தற்போது கட்சியின் அடிப்படையான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று கட்டங்களாக 56 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார். நேற்று முன் தினம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான்காம் கட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
தொடர்ந்து 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில் ஒவ்வொரு முறை விஜய் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டதும், பதவி கிடைக்காதவர்கள் தலைமை குறித்து வெளியில் இருந்து நிர்வாகிகள் பேட்டி கொடுப்பது அல்லது வீடியோ மூலம் பேட்டி கொடுப்பது வழக்கம் ஆகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தே அவரது ஆதரவாளர்களாக இருந்த பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக நடிகர் தாடி பாலாஜி, நடிகர் சௌந்தரராஜன் ஆகியோர் விஜயின் மாநாட்டுக்கு முன்பிருந்தே அவரது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். நடிகர் தாடி பாலாஜி ஆரம்பத்தில் விஜய் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இடையில் விஜய் டிவி பக்கம் ஒதுங்கி இருந்த அவர் குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதற்கிடையே தமிழக வெற்றி கழக பணிகளில் தீவிரம் காட்டிய அவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கொடியேற்று விழா என பிசியாக இருந்தார். கட்சிக்கொடி அறிமுக விழாவிலும், கட்சி மாநாட்டிலும் அவருக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விஜய் மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது மார்பில் விஜயின் உருவத்தை டாட்டூ குத்திக் கொண்டார்.
இன்னொரு நடிகரான சௌந்தர்ராஜன் மாநாட்டின் போதும் அதற்கு முன்னதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி போலவே செயல்பட்டார். குறிப்பாக மரக்கன்று நடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அவரும் பிசியாகவே இருந்தார். இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த உடனேயே ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோருக்கு மாநில பதவி வழங்கப்பட்டது.

ஆனால் நடிகர் சௌந்தரராஜன், தாடி பாலாஜி ஆகியோருக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. அதை குறிப்பிட்டு தாடி பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீம் ஒன்றை தனது வாட்ஸாப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். மேலும் விஜயின் நண்பர்கள் பலரும் திரை துறையில் கால் பதித்து தற்போது நடிகர்களாக வலம் வருகின்றனர். சில நடிகைகளும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.
ஆனால் திரைத்துறையில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்தால் கட்சியின் பெயர் கெட்டுவிடும் என நினைக்கிறாரோ என்னவோ விஜய் இதுவரை தனது நண்பர்களுக்கும் நடிகர்களுக்கும் பொறுப்பு கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் இன்னும் சில நாட்களில் அதற்கு பதில் கிடைக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications