அந்த 10 நொடி.. விஜயகாந்த் முகத்தை பார்த்து அப்படியே கலங்கிய விஜய்.. ஈரமான கண்கள்.. மிஸ் யூ கேப்டன்
சென்னை: மறைந்த விஜயகாந்துக்கு மலர் மாலை அணிவித்து நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு கண்கள் கலங்கியபடி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது திடீரென்று நின்ற நடிகர் விஜய் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் முகத்தையை பார்த்தபடி நின்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி எம்எல்ஏவானார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். திரைத்துறையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளலாக வலம் வந்த விஜயகாந்த் நேற்று காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று இரவில் நடிகர் விஜய் வாடிய முகத்துடன் நேரில் வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழைக்கு மாலை நடிகர் விஜய் மாலை அணிவித்தார். அதன்பிறகு கண்ணாடி பேழையில் தலை வைத்து விஜயகாந்தின் முகத்தை பார்த்து கண்கலங்கினார்.
மேலும் அருகே நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது திடீரென்று நின்ற விஜய், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் முகத்தை பார்த்தபடி சுமார் 10 வினாடிகள் வரை அப்படியே நின்று கண்கலங்கினார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இருப்பினும் அவர் துவக்கத்தில் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து செந்தூர் பாண்டி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றது. விஜயகாந்த் அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்தார்.
இதையடுத்து மகன் விஜயை திரைத்துறையில் நடிகராக வளர்க்க அவரது தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர், விஜயகாந்தை அந்த படத்தில் நடிக்க வைத்தார். இதுபற்றி விஜயகாந்திடம் கூறியபோது விஜயகாந்த் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இப்படி திரைத்துறையில் தான் உச்ச நட்சத்திரமாக வளர உதவிய நடிகர் விஜயகாந்துக்கு நேற்று விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications