விஜய் நாளை அவசர ஆலோசனை.. சீமான் விமர்சனத்துக்கு நடுவே கூடும் நிர்வாகிகள்.. பிளான் இதுவா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயை நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். இது தற்போது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் கொடி விளக்கம், கொள்கைகள் வெளியிடப்பட்டது. நடிகர் விஜயும் தான் மேற்கொள்ளப்போகும் அரசியல் மற்றும் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசினார்.
நடிகர் விஜயின் இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளானது. இதற்கு அந்த மாநாட்டில் குவிந்த ஏராளமான தொண்டர்களும், நடிகர் விஜயின் அனல் பறந்த பேச்சும் தான் காரணம். மேலும் நடிகர் விஜய் பாஜகவை பிளவுவாத கட்சி எனவும், தமிழகத்தை ஆளும் திமுகவை ஊழல் கபடதாரிகள் என்றும் விமர்சனம் செய்தார். அதோடு கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக என்றும் மேடையில் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் பேச்சுக்கு பாஜக, திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜயின் பெயரை கூறாமல் சீமான் நேற்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்று விஜய் கூறியதால் சீமான் கொந்தளித்து பேசியிருந்தார்.
அப்போது அவர், ‛தம்பி, நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பிஎச்டி வாங்கி உள்ளோம். நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியம் எங்கு இருக்கிறது? என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன் நெடுஞ்செழியனின் பேரன்களும், பேத்திகளும் நாங்கள். அது கதை இல்லை தம்பி. என் இன வரலாறு. எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை.
அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு. எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை.. ஒன்று ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ. எப்படி தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றாக முடியும்'' என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை கட்சி தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த அவசர ஆலோசனை என்பது நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த ஆலோசனை கூட்டம் நாளை காலையில் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதாவது நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்க்க மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 27 ம் தேதி அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் பற்றி இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தற்போது விஜய் கட்சியின் பேச்சுக்கு எதிர்வினை கிளம்பி உள்ளது. கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாம். அதுமட்டுமின்றி சீமான் திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் எப்படி ஒன்றாக முடியும்? இரண்டும் வெவ்வேறு என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளதற்கும் பதிலடி கொடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நாளை மேற்கொள்ள உள்ள அவசர ஆலோசனை என்பது அதிக கவனம் பெற உள்ளது.












Click it and Unblock the Notifications