நடிகர் கார்த்தி அரசியலுக்கு போகலாம்! கிளப்பிவிட்ட நடிகர் விக்ரம்! பெரிய கும்பிடு ஒன்று போட்டு எஸ்கேப்!
சென்னை: அரசியலுக்கு செல்வதற்கான தகுதி நடிகர் கார்த்தியிடம் நிறையவே உள்ளதாக கூறி, பொன்னியின் செல்வன் 2 திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம் பேசுவதை கேட்ட கார்த்தி, ஐயையோ ஆள விடுங்கப்பா சாமி என்பது போல் ஒரு ரியாக்ஷனை கொடுத்துவிட்டு பெரிய கும்பிடு ஒன்று போட்டார்.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மொத்த டீமும் விழுந்து விழுந்து சிரித்தது.

நடிகர் கார்த்தி மேடையில் பேசினார் என்றால் தமிழ் உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும் என்று புகழ்ந்த நடிகர் விக்ரம், எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுக்கு சொந்தக்காரர் கார்த்தி எனக் குறிப்பிட்டார்.
நடிகர் விக்ரம் கூறியதை போல் நடிகர் கார்த்தி ஏற்கனவே பல்வேறு அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருவது கவனிக்கத்தக்கது. குறிப்பாக உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை சத்தமின்றி செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது அண்ணன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவுகளையும் எந்த விளம்பரமும் இல்லாமல் கவனித்து வருகிறார்.
தற்போது நடிகர் சங்கப் பொறுப்பில் உள்ள இவர் நலிந்த கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக தான் அவரை அரசியலுக்கு செல்லத் தகுதியானவர் என நடிகர் விக்ரம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
நடிகர் கார்த்தியை பொறுத்தவரை அவருக்கு நேரடியாக அரசியல் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்கு அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து படித்து பார்த்த கார்த்தி, தமிழக அரசை பாராட்டியதோடு இன்னும் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications