விஜய்க்கு ஆஹா ஓஹோன்னு பாராட்டு.. அமீர், பிரகாஷ் ராஜ் எங்கே போனாங்கன்னு தெரியல.. ஜெயக்குமார் விளாசல்
சென்னை: நான் ஓடி ஒளிபவன் இல்லை என்று சவால் விடும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. எப்போதும் குரல் கொடுக்கும் அமீர், பிரகாஷ்ராஜ் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். மேலும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு பாராட்டவும் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வட சென்னையில் விலையில்லா தேநீரகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசிக்கு இணங்க தமிழகம் முழுவதும் கழகத்தினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, கோடைக்காலம் முடிந்து கொஞ்சம் கிளைமேட் மாறி இருக்கிறது. இதனால் மக்களுக்கு டீ, காபி கொடுக்கும் வகையில், வட சென்னையில் விலையில்லா தேநீரகம் திறந்து வைக்கப்படுகிறது. 48வது வட்டத்தின் கழக செயலளார் திரு ஆறுமுகம் ஏற்பாட்டில் தினந்தோறும் மாலை காபி, டீ சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் மாலை இங்கு வந்து இலவசமாக டீ, காபி சாப்பிட்டு கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட துறையில் மட்டும் இன்றி, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற வகையில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களிடம் டிக்கெட்டுக்கு 200 ரூபாய் வாங்கி சம்பாதிக்கும் நடிகர்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வாய் திறக்க யோசிக்கிறார்கள்.
நான் ஒரு ட்வீட் போட்டேன். அந்த ட்வீட்டை பார்த்து இருப்பீர்கள். அதற்கு பிறகு தான் ஒவ்வொருவராக முழித்துக்கொண்டு குரல் கொடுத்து வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் எங்கள் ஆட்சியை பற்றி பேசும் அமீர் தற்போது வரை இன்னும் குரல் கொடுக்கவில்லை. அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. அப்போ, அப்போ திமுக எழுதி கொடுக்கும் வசனத்தை சொல்லும் பிரகாஷ் ராஜ் இன்னும் வாய் திறக்கவில்லை.
ஆனால் இதற்கு அப்பாற்பட்டு நடிகர்கள், அரசியல் நோக்கர்கள், அரசியல் பற்றி தெரிந்தவர்கள் வாய் திறக்கும் போது தான் இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் புத்தி வரும். அந்த வகையில் தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குரல் கொடுத்ததோடு, அங்கு நேரில் வந்து பார்த்தது பாராட்டத்தக்கது. இது விஜய் மட்டுமில்லை யாராக இருந்தாலும் பாராட்டுவோம். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. எனவே விலையில்லா தேநீரகம் திறந்ததற்கும் விஜயின் பிறந்தநாளுக்கும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீர்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய பிரச்சினை. கிட்டத்தட்ட 55 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் நிறைய பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் முன்பு விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தார்கள். அன்றைக்கு ஸ்டாலின் நேரில் போனார். ஆனால் இன்றைக்கு ஏன் அங்கு போகவில்லை.
நான் ஓடி ஒளிபவன் இல்லை என்று ஏன் சவால் விடுகிறார். அப்போது கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்றிருக்கலாமே.. ஏன் போகவில்லை. வெறும் சட்டசபை மேஜையை மட்டும் தட்டி சவால் விட்டால் போதுமா?.. இது தமிழ்நாடு மக்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications