“எரும சாணி விஜய் ஏமாத்திட்டாரு”.. ரெசார்ட் வெப் சீரிஸ் நடிகை கண்ணீர் வீடியோ!
சென்னை: 'எரும சாணி' விஜயகுமாரால் பல வாய்ப்புகளை இழந்து விட்டதாக துணை நடிகை ஒருவர் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் போட்ட நிலையில், நடிக்கவும் அழைக்காமல், பணமும் தராமல் ஏமாற்றுகிறார்கள் என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதில் பேசும் பெண், "நான் ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்த ரிசார்ட் வெப் சீரிஸில் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக ஓரு வருடத்துக்கு கால்ஷீட் வேண்டும் என ஒப்பந்தம் செய்தார்கள். இவர்கள் வெப் சீரிஸூக்கு முன்பு சொன்னதும், இப்போது நடப்பதும் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக நான் தயாரிப்பு தரப்பில் பேசினேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

எல்லாரும் எருமசாணி விஜயகுமார் தான் இந்த வெப் சீரிஸ் தயாரிப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், அவரிடம் தான் பேச வேண்டும் என சொல்கிறார்கள். அவரிடம் போய் கேட்டால் தயாரிப்பு தரப்பை கை காட்டுகிறார். ஓரு ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டு விட்டு என்னை முடக்கி விட்டார்கள். என்னை மோசடி செய்தார்கள். கடந்த 4 மாதமாக எந்த வேலையும் இல்லை. தயாரிப்பு தரப்பிடம் கேட்டால் ஷூட்டிங் இருக்கு, உங்களுக்கு பெரிய கேரக்டர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
ஹாட் ஸ்டாரில் இன்னொரு ப்ராஜெக்டில் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் ரிசார்ட் தயாரிப்பு தரப்பில் என்னை போகவிடவில்லை. எனக்கு இதில் பெரிய கேரக்டர் என சொன்னார்கள். எனக்கு சம்பளம் கூட வரவில்லை. நான் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். எருமசாணி விஜயகுமார் தான் என்னை வெப் சீரிஸில் நடிக்க அணுகினார். அவர் நல்ல பிரபலம், நல்ல டீம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் கேரளாவில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். 3 முறை ஆடிஷனுக்கான கேரளாவில் இருந்து வந்தேன். 90 சதவிகிதம் நீங்கள் தான் ஹீரோயின் கேரக்டர் என சொன்னார்கள். நான் சம்பளம் வரவில்லை என கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். ஷூட்டிங்கே இல்லாமல் ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். எனக்கு வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது நண்பர், எனக்காக விஜயகுமாரிடம் பணம் கேட்டபோது நடிக்க வேண்டாம், இனிமேல் வர வேண்டாம் என சொல்லியிருக்கிறார். நான் எப்படி இருக்கிறேன் என்று கூட கேட்கவில்லை.
நான் இப்படி வீடியோ வெளியிட்டால் நிச்சயம் என் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்பது தெரியும். நான் யாரிடம் சென்று முறையிடுவது எனத் தெரியவில்லை. நடிப்புத்துறையில் இருப்பவர்களுக்கு 7,8 மாதங்கள் வேலையில்லாமல் இருப்பது ஒன்றும் சாதாரணமானது கிடையாது. விஜயகுமாரின் மனைவி நக்ஷத்ராவும் என்னை அவதூறாக பேசுகிறார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு என்னை இப்படி பேசுகிறார்.
நான் குறும்படத்தில் நடித்து போராடி தான் நடிக்க வாய்ப்பு பெற்றேன். எல்லா தப்பும் என்மேல் போடுறாங்க. நீங்க தானே நடிக்க வந்தீங்க என சொல்கிறார்கள். என்னோட சம்பளத்தை தானே கேட்டேன். பல மாதங்களாக என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய சூழலை இவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏமாற்றுபவர்கள் இருப்பதால் தான் சினிமாவில் போகவே எல்லாரும் பயப்படுகிறார்கள்.
என் உடல்நிலை மொத்தமாக சிதைந்துவிட்டது. இந்த வெப் சீரிஸை குளோபல் வில்லேஜ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அவர்களைப் போல நடிக்க வருபவர்களை மோசமாக நடத்தும் நிறுவனத்தைப் பார்த்தது இல்லை. இதுபோன்ற பிரச்சனை வேறு ஒருவருக்கு நடக்கக்கூடாது என்று தான் வீடியோ வெளியிடுகிறேன். உடைந்து போய் இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
'எரும சாணி' என்ற யூடியூப் சேனல் மூலம் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு புகழ்பெற்றவர் விஜயகுமார். ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசைய முறுக்கு', 'நான் சிரித்தால்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அருள்நிதி நடித்த 'டி-பிளாக்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் சக யூடியூப் பிரபலம் நக்ஷத்ராவை திருமணம் செய்து கொண்டார். ஜியோ ஹாட்ஸ்டாரில் என்ற வெப் சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது துணை நடிகை கூறியுள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications