இடைவிடாத 20 நிமிடம்.. அனுஷ்காவுக்கு விசித்திர நோய்! சிரிப்பால் சோகம் - அதென்ன சூடோபுல்பார் பாதிப்பு?
பாகுபலி உள்ளிட்ட முன்னணி படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா சூடோபுல்பார் என்ற வினோத நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அனுஷ்கா வினோத நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரையுமே சிரிக்க வைக்கும் ஆற்றல் நமது சிரிப்புக்கு இருக்கிறது. ஆனால், அதே சிரிப்பு நமக்கும் சுற்றி இருப்பவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினால்.. அதுதான் அனுஷ்காவுக்கு நடந்து உள்ளது.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு திரையலங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். தமிழில் அருந்ததி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த அனுஷ்கா, விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அனுஷ்காவை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்று இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்த திரைப்படம் பாகுபலிதான். பாகுபலி 1 படத்தில் அம்மாவாக நடித்த அவர், பாகுபலி 2 ஆம் பாகத்தில் முழு நீள படத்திலும் நடித்து இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தார்.

அனுஷ்கா நேர்காணல்
பாகுபலி 2 ஆம் பாகத்திற்கு பிறகு சினிமாக்களில் அதிகளவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஒரு நேர்காணலில் பல்வேறு விசயங்களை பேசி இருக்கிறார்.

சிரிப்பு நோய்
அவர் பேசுகையில், "சிரிப்பு நோய் எனக்கு இருக்கிறது. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது எனக்கு இருக்கும் நோய். நீங்கள் சிரிப்பது எல்லாம் ஒரு நோயா என்று நினைக்கலாம். உண்மையிலேயே அந்த நோய் எனக்கு உள்ளது. நான் ஒரு முறை சிரிக்க தொடங்கினால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நிறுத்தாமல் சிரித்துக் கொண்டே இருப்பேன்.

படப்பிடிப்பில் சிக்கல்
நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் சமயத்திலும், அதை படப்பிடிப்பில் படமாக்கும் நேரத்தில் தரையில் விழுந்தும் கூட சிரித்து இருக்கிறேன். நகைச்சுவை காட்சிகளை படமாக்கும் நேரத்தில் நான் மிகவும் கஷ்டப்படுவேன். சில நேரங்களில் சிரிப்பை அடக்கவே முடியாமல் படப்பிடிப்பின்போது இடைவேளை எடுத்துவிட்டு சென்று விடுவேன்.

மருத்துவரிடம் சென்ற அனுஷ்கா
சிரிப்பு நின்றதற்கு பிறகே நான் அங்கு வந்து மீண்டும் நடிப்பேன்." என்று தெரிவித்து உள்ளார். தொடக்கத்தில் இதுகுறித்து பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவே இல்லையாம். ஒரு கட்டத்தில் இது தொடர்ந்துகொண்டே இருந்தபோதுதான் அவர் இதன் தீவிரத்தை உணர்ந்து இருக்கிறார். எனவே மருத்துவர்களிடம் அணுகி இதுகுறித்து அவர் தனக்கு ஏற்பட்டு இருக்கும் சிரிப்பு பிரச்சனையை விளக்கி உள்ளார்.

நினைவிழக்கும் அபாயம்
இதனை கேட்ட மருத்துவர்கள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். மிகவும் அரிய வகை நோயான இது மூளையில் ஏற்படும் அலர்ஜி மற்றும் வீக்கம் காரணமாக ஏற்படும் என்று கூறி உள்ளார்கள். இதனால் உயிருக்கு பாதிப்பு இல்லையாம்.

சூடோபுல்பார் பாதிப்பு
ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட 100 ல் ஒருவருக்கு நினைவுகளை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சூடோபுல்பார் பாதிப்பு எனப்படும் இந்த நோய் PBA என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு 30 நிமிடங்களுக்கு மேலும் இதனால் சிரிப்பு தொடரும். இந்த சூடோபுல்பார் பாதிப்பால் சிரிப்பு மட்டுமின்றி இடைவிடாத அழுகையும் இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications