நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்.. கண்கள் பிதுங்கிய நிலையில் இறந்து கிடந்த கொடூரம்
சென்னை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்கி என்கிற விக்னேஷ் குமார் (40) அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்கி மர்மமான முறையில் விருகம்பாக்கத்தில் தசரதாபுரம் 8ஆவது காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது கண்கள் இரண்டும் பிதுங்கிய நிலையில், தலையில் ரத்தக் காயங்களுடன் அவர் உயிரிழந்து கிடந்தார். கையில் அறுப்பு காயமும் உள்ளது.

இவர் கிடந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் உயிரிழந்து 2 நாட்களாகியிருக்கலாம் என தெரிகிறது. அவருடைய தாயார் மாயா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர் இறந்து கிடந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அது போல் கொலை செய்யப்பட முகாந்திரம் இல்லை என போலீஸார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் விக்கி மதுபோதையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் நாக்கு வறண்டதால் கண்கள் பிதுங்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் விக்கி, குடி போதையில் பிரச்சனை செய்ததற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தவிர இவர் மீது பல வழக்குகள் உள்ளன. விக்கியின் தாயார் மாயாவும் நடிகை தான். அதே நேரம் பாபிலோனா இவரின் உடன்பிறந்த சகோதரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாபிலோனாவின் சித்தி மாயா, இவருடைய மகன்தான் விக்கி.
தமிழ் திரையுலகில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானர் பாபிலோனா. இவர் தை பொறந்தாச்சு, என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததும் ஃபிட்னஸ் டிரைய்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகிவிட்ட பாபிலோனா, கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பாபிலோனாவின் சகோதரர் ஒரு முறை வடபழனி பகுதியில் குடித்துவிட்டு தகராறு செய்தார். அவரை விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டரின் நெஞ்சில் குத்திவிட்டு தப்பி சென்றார். இவர் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் சிக்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications