அடங்கப்பா! காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல் கடிதத்தை நேற்றே எதிர்பார்த்து காத்திருந்த கஸ்தூரி
சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என குஷ்புவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க நாளை வரை பொறுமை காக்க முடியவில்லை என கஸ்தூரி நேற்று இரவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை குஷ்பு. அங்கு அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த 6 ஆண்டுகளில் நக்மாவுடன் மோதல் போக்கு, கட்சியின் தமிழக தலைமையுடன் மோதல் என ஒரு பனிப்போர் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் குஷ்பு.
Exclusive: குஷ்பு அழையா விருந்தாளியாக பாஜக கதவை தட்டுகிறார்... ஏன் போகிறார் தெரியுமா..? -K.s.அழகிரி
வாழ்த்து
அது போல் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தமைக்கு அவருக்கு வாழ்த்தையும் குஷ்பு தெரிவித்திருந்தார். இது போன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைகிறார் என பேச்சு அடிப்பட்டது. அவர் பாஜகவில் இணையக் கூடாது என்பதற்காக அவருக்கு வசந்தகுமார் வகித்து வந்த செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
குஷ்புவுடன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் இன்று செய்தியாளர்களை குஷ்பு சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகின. வழக்கமாக பாஜக இணைப்பு செய்திகளுக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் டெல்லி செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
காங்கிரஸ் பதவி
அப்போது காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் இன்று காலை குஷ்புவின் பதவி பறிக்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கஸ்தூரி ட்வீட்
இதெல்லாம் சரி ஆனால் குஷ்பு இன்று ராஜினாமா செய்வார் என்ற தகவல் நடிகை கஸ்தூரிக்கு நேற்றே தெரிந்தது எப்படி என தெரியவில்லை. நேற்று இரவு 11.55 மணிக்கு அவர் போட்ட ட்வீட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என குஷ்புவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க நாளை வரை பொறுமை காக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.