சாப்பிடுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை... சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள் -குஷ்பு உருக்கம்
சென்னை: உணவுவகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என நடிகைகளுக்கும், சமூக வலைதள ஆர்வலர்களுக்கும் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு வேளை உணவு கிடைக்காமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சிரமப்படும் தருணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.
விரும்பிய உணவுகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் அதை பொதுவெளியில் காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்பது தான் குஷ்புவின் கோரிக்கையாக உள்ளது.

வீடுகளில் விஐபிக்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரும் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த விஐபிக்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவதோடு அதில் தங்கள் கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

காட்சிப்படுத்துதல்
இதனிடையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் நிறைய நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

குஷ்பு உருக்கம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே பலரும் போராடும் நிலை உள்ளதாகவும், இது போன்ற தருணத்தில் கண்கவர் உணவுவகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் கூட நமது பகட்டை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டாம் என உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

வேண்டாம் என கூறவில்லை
மேலும், விரும்பிய உணவு வகைகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றும், தாம் வேண்டாம் என்று சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார். மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களை பற்றியும் சிந்தித்து சமையல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்பதே தனது கோரிக்கை என குஷ்பு சமூக நல அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications