கர்நாடக தேர்தலில் பாஜக ஜெயிக்கணும்! கபாலீஸ்வரர் கோவிலில் நமீதா நடத்திய 1,008 தாமரைப்பூக்கள் அபிஷேகம்
சென்னை: கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டியும், இன்று தனது பிறந்தநாள் என்பதாலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 1,008 தாமரைப்பூக்கள் அபிஷேகம் நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் நடிகை நமீதா.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்த போது பாஜகவில் இணைந்த நடிகை நமீதா சில மாதங்கள் பரபரப்பாக கட்சிப் பணியாற்றி வந்தார்.
அதற்குள் எல்.முருகன் மாற்றப்பட்டதால் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை குறைக்கத் தொடங்கினார் நமீதா. இதனிடையே பாஜக செயற்குழு உறுப்பினர் பதவியில் மட்டும் அவர் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் இப்போது பரபரப்பாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜக வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் நடிகை நமீதா. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக வெற்றிக்காக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 1,008 தாமரைப்பூக்கம் அபிஷேகம் நடத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா, இன்றைய தினம் தனக்கு ஸ்பெஷலான தினம் என்றும் ஏனெனில் தனது இரட்டை குழந்தைகளோடு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுவதாகவும், அதேபோல் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுகிறது எனவும் காரணம் கூறினார்.
கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றிபெறப் போவது உறுதி என்றும் பாஜக வெற்றிபெற வேண்டி தாமரைப்பூக்கள் அபிஷேகம் செய்ததாகவும் தெரிவித்தார்.
அண்ணாமலை மீது ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு குறித்த கேள்விக்கு, அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கூறி ஆள விடுங்கப்பா சாமி என்பது போல் அங்கிருந்து புறப்பட முயன்றார்.
இருப்பினும் செய்தியாளர்களிடம் இருந்து அரசியல் தொடர்பான கேள்விக்கணைகள் வந்து விழுந்ததால், இதென்ன வம்பா போச்சு என்கிற வகையில், நோ அரசியல், அரசியல் பற்றி இப்போது பேசமாட்டேன் எனக் கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆனார் நடிகை நமீதா.












Click it and Unblock the Notifications