பள்ளி சீருடையில் காவல் நிலையத்தில் அழுத மாணவிகள்! கையெழுத்திட வந்த ரஞ்சனா நாச்சியார்.. கொந்தளிப்பு
சென்னை: கொளப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகளிடையான சண்டை தொடர்பாக புகாரின் பேரில் பள்ளி மாணவிகள் சீருடையில் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியது தவறு என நடிகை ரஞ்சனா நாச்சியார் கொந்தளித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதியான கொளப்பாக்கத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்குள் ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சில மாணவிகள் மீது இன்னொரு தரப்பு மாணவியின் பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

அதற்கு அந்த தலைமை ஆசிரியர் தாங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் போலீஸுக்கு சென்று அங்கு புகார் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அந்த மாணவிகள் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் மாணவிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி சீருடையிலேயே காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது ஏற்கெனவே அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த சம்பவத்தில் அவர்களை தாக்கி, ஓட்டுநர், நடத்துநரை கடுமையாக பேசியதாக புகாரின் பேரில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப்பட்டது. அவர் தினமும் காலை, மாலை இரு வேளையும் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில் ரஞ்சனா, மாங்காடு காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு மாணவிகள் சீருடையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அங்கிருந்த பெற்றோரிடம் என்னாச்சு என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நடந்ததை கூறினர். இதையடுத்து ரஞ்சனா அவர்களிடம், "இதற்கெல்லாம் காவல் நிலையத்திற்கு வரலாமா, நீங்களே பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாமே, அதுவும் சீருடையில் மாணவிகளை அழைத்து வருவது தவறில்லையா" என கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மாங்காடு காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றேன். அப்போது அங்கு மாணவிகள் அழுது கொண்டே வந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் காவல் துறையினர் உடனே வர வேண்டும் , இல்லாவிட்டால் எஃப்ஐஆர் போட்டுவிடுவேன் என மிரட்டியதாக தெரிவித்தனர்.
இது போல் சின்னக் குழந்தைகளை மிரட்டுவது சரியா, பெற்றோர் புகார் கொடுத்தும் போலீஸுக்கு செல்ல கூறிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளை சீருடையில் வரவழைத்து நாள் முழுவதும் விசாரித்த போலீஸாரும் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் மீது நான் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளேன் என்றார் ரஞ்சனா நாச்சியார்.
பிளாஷ்பேக்: நடிகை ரஞ்சனா நாச்சியார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பஸ்ஸின் மேற்கூரை மீது ஏற முயன்றதை பார்த்ததும் ரஞ்சனா அதிர்ச்சி அடைந்தார்.
ஓடும் பேருந்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இந்த மாணவர்களின் செயல்பாட்டை தட்டி கேட்டார். இதற்காக பேருந்தை வழிமறித்த ரஞ்சனா, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் பின்பக்கம் சென்று மாணவர்களை இழுத்து கீழே தள்ளினார். இறங்க மறுத்த மாணவர்களை தாக்கினார். பிறகு கண்டக்டரிடம் கடுமையாக ஒருமையில் பேசிய ரஞ்சனா கண்டக்டரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications