மேயர் பிரியா வராங்க! செய்தி வாசிப்பாளராட்டும் பேசிட்டு போறாங்க! ஷனம் ஷெட்டி ஆவேசம்
சென்னை: "மேயர் பிரியா வராங்க, செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க, ஆனால் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை" என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை ஷனம் ஷெட்டி கொந்தளிப்புடன் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு சின்மயி, ஷனம் ஷெட்டி உள்ளிட்டோர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ராயபுரம், திருவிக நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5,6 ஆகிய இரு மண்டலங்களில் குப்பைகளை அள்ளும் பணி, பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். தூய்மை பணிகள் தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1 ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது 11 ஆவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை ஷனம் ஷெட்டி சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம்.
அந்த நேரத்தில் தனது குடும்பத்தை விட்டுவிட்டு நமக்காக வந்தவர்கள். ஊர் ஊரா, தெரு தெருவா சுத்தம் செய்தாங்க. இவர்கள் எனது நண்பர்கள். மேயர் பிரியா வராங்க, செய்தி வாசிப்பாளர் போல் செய்தி சொல்லிவிட்டு போறாங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது, தீர்வு எட்டப்படவில்லை.
எத்தனை நாள்தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள். பணி நிரந்தரம் செய்வீர்கள் என நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் (அரசு) காப்பாற்ற முடியவில்லை என்றால் இனிமேல் முதல்வரிடம் எதை எதிர்பார்க்க முடியும்.
மக்களுக்காகதான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன? உங்கள் வாக்குறுதியைதான் கேட்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க என ஆவேசத்துடன் கூறினார்.
ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திவரும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்களுடன் போராட்டக் களத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications