ஜெனீவாவிலிருந்து வந்த தங்கம், வைர நகைகளை புதைத்து வைத்துள்ள சீமான்.. விஜயலட்சுமி பகீர் புகார்
சென்னை: ஜெனீவா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த தங்கம், வைர நகைகளை தனது சொந்த ஊரில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதைத்து வைத்துள்ளதாக நடிகை விஜயலட்சுமி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி, பட இயக்குநர், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர் சீமான். சீமான் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பிறந்தவர். இவரது தந்தை காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த செந்தமிழன். தாய் அன்னம்மாள்.

அரணையூர் 5 ஆம் வகுப்பு வரை படித்த சீமான், 11, 12 ஆம் வகுப்பு, கல்லூரி படிப்பை இளையான்குடியில் முடித்தார். இவர் தற்போது நாம் தமிழர் எனும் கட்சியை நடத்தி வருகிறார். இவருடைய கட்சி ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாவிட்டாலும் அந்த கட்சிக்கு என வாக்கு வங்கி கணிசமாக உள்ளது.
இவர் பாரதிராஜா, மணிவண்ணனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவர் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது இவருக்கு நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், அதாவது திருமணம் செய்து கொள்வேன் என உறுதிமொழியை அளித்து சீமான், விஜயலட்சுமியுடன் பல முறை நெருக்கமாக இருந்துள்ளார் என கடந்த 2011 ஆம் ஆண்டு பரபரப்பு புகாரை நடிகை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சீமான் குறித்து விஜயலட்சுமி அவ்வபோது புகார்களை கூறி வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் அவ்வப்போது சீமானை அவதூறாக பேசி வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் குறித்து விஜயலட்சுமி புகார் செய்துள்ளார்.
அந்த புகாரில் தன்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட சீமான் உங்களை திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என கேள்வி கேட்ட நிருபரை ஒருமையில் பேசினார் விஜயலட்சுமி. இது குறித்து சீமானிடம் கேட்ட போது விஜயலட்சுமி புகாரை திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக இருக்கிறது என்றார்.
இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் வீரலட்சுமி பேசுகையில் "சீமான் கேவலத்தை பற்றி எல்லாம் நான் பேச மாட்டேன் என சொல்கிறார். அவர் 10 வருஷத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் 20 ஆயிரத்திற்கும் அக்கா விஜயலட்சுமியின் காலடியில் கிடப்பாராம்.
அக்கா தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை என்னிடம் சொல்லியுள்ளார். அதாவது சுவிட்சர்லாந்து, ஜெனீவா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை கார்த்திக் மூலம் வைர வாட்ச், தங்க நகைகள், வைரக்கல் பதித்த நகைகள் எல்லாம் சீமானுக்கு வருமாம். அந்த நகைகளை இரவு போட்டு பார்த்துவிட்டு அடுத்த நாள் தாயாரின் சொந்த ஊரான இளையான்குடிக்கு போய் கொடுத்துவிடுவாராம்.
சீமானின் தாயார் அந்த நகைகளை பூமிக்கு அடியில் புதைத்து வைத்துவிடுவாராம். அப்பவே அந்த நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். இப்போது வரை வெளிநாடுகளில் இருந்து நகைகள் சீமானுக்கு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியென்றால் அவரிடம் எத்தனை கோடி மதிப்பிலான நகைகள் இருக்கும் என கணக்கு போட்டு பாருங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி கூறுகையில் சீமான் முகம் பதித்த தங்க செயின் போட்டிருக்கும் வீடியோவை உங்களுக்கு நான் காட்டியுள்ளேன். அதன் மதிப்பு 12 ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்ச ரூபாய். இப்படி பல நகைகள் அவரிடம் இருக்கின்றன. எல்லாத்தையும் வைத்துக் கொண்டு தன்னால் வாடகை கட்டவே பணமில்லை என்கிறார். எனவே முதல்வர் ஸ்டாலின் சார், சீமான் வீட்டுக்கு வருமான வரித் துறை ரெய்டு அனுப்புங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications