நடிகை விஜயசாந்தியை "அவர்" விடலயே..டெல்லிக்கு பறந்த "தூதுவர்" யார் தெரியுமா? ஆட்டத்தை கலைத்தாடும் சசி
சென்னை: அதிமுகவை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சசிகலா, அடுத்தக்கட்ட காய்நகர்த்தலையும் ஆரம்பித்துள்ளாராம்.. அதுகுறித்த பிரத்யேக செய்தி ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.
"அதிமுகவை உயிரை கொடுத்தாவது மீட்பேன், இலையை வாங்கிவிடுவேன்.. அனைவரையும் ஒன்றுசேர்த்துவிடுவேன்" என்று விடாமல் முழுமூச்சாக சொல்லி கொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.
ஒருபக்கம் ஆன்மீக சுற்றுப்பயணம், இன்னொருபக்கம் தன்னுடைய ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் சசிகலாவால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை தளர்த்த முடியவில்லை.

கரிசனம்: அதிமுகவுக்கு தான் தலைமை தாங்கவேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாகவும், அதிமுக தலைவர்கள் இப்போது தன்னுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், அதிமுகவில் ஒரு சிலர் மட்டுமே தன்னை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்தாலும், சசிகலாவால், அதிமுகவை இப்போதுவரை ஒருங்கிணைக்க முடியவில்லை. அனைத்துக்குமே, மேலிட பாஜகவின் கரிசனமும், ஆதரவும் தேவை என்பதையும் சசிகலா நன்றாகவே உணர்ந்துள்ளார்.
அதனால்தான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.. இதற்காக, பிரபல நடிகையும், பாஜக ஆதரவாளருமான விஜயசாந்தியின் உதவியை, சசிகலா கடந்த வருடமே நாடியிருந்தார். சசிகலாவை திடீரென சந்தித்து பேசியிருந்த நிலையில், "சின்னம்மா எனக்கு அம்மா போல.. நான் அவருக்கு மகள் போல" என்று விஜயசாந்தி பாசத்தை பிழிந்தாலும், அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்பதால் இந்த சந்திப்புக்கு "அரசியல் சாயம்" அப்போது அதிகமாகவே பூசப்பட்டது..
ரஜினிகாந்த்: ரஜினியை வைத்து அமித்ஷாவை சந்திக்க சசிகலா ஒருபக்கம் முயற்சித்த நிலையில், மறுபக்கம் விஜயசாந்தி மூலமாகவும் காய்நகர்த்தலை தொடங்கியிருந்தார்.. விஜயசாந்தியும், சசிகலாவுக்கு முடிந்தவரை உதவியதாக தெரிகிறது..

சசிகலாவுக்காகவே, பாஜக தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, "ஹெச்.எம்"ஜி-யை சந்திக்க சசிகலா விரும்புகிறார்.. (ஹோம் மினிஸ்டர் அமித்ஷாவைதான், சுருக்கமாக ஹெச்.எம். என்று சொல்வார்கள்) ஆனால், அவரை சந்திப்பதற்கு முன்பாக உங்களை சந்திக்க விரும்புகிறார். அவருக்காக 20 நிமிடம் நேரம் ஒதுக்க இயலுமா ஜி? என்று கேட்டாராம் விஜயசாந்தி. அதற்கு ஜே.பி.நட்டாவோ, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடியட்டும், பிறகு பார்க்கலாம் என்றாராம்..
விஜயசாந்தி: கடந்த மாதம்கூட விஜயசாந்தியை, சசிகலா சந்தித்து பேசியிருக்கிறார்.. இதற்கு காரணம், அமித்ஷா சென்னைக்கு வரஉள்ளதால், அவரை சந்திக்க விரும்பினாராம் சசிகலா. இதற்காக, நடிகை விஜயசாந்தி மூலம் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சுக்கு "நோ" சொன்னது போலவே சசிகலாவுக்கும் "நோ" சொல்லப்பட்டுவிட்டதாம்.. அதனால் அமித்ஷாவை சசிகலாவால் சந்திக்க முடியவில்லை. இதில் சசிகலா பயங்கரமான அப்செட் ஆனதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மூலம் அமித்ஷாவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாராம்... அந்த "தூதுவர்" எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக இருந்தாலும் சசிகலாவுக்காகவும் சில உதவிகளை அவ்வப்போது செய்து வருபவராம்.. இவர்கள் இருவரையுமே தன்னுடைய நட்பு வளையத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறார்.. இந்த நட்பின் அடிப்படையிலேயே அவரிடம் உதவி ஒன்றை கேட்டுள்ளார் சசிகலா.
அதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்பில்லாத பல சொத்துக்களும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வழக்கில் தொடர்பில்லாத அந்த சொத்துக்களை விடுவித்து தருமாறு அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார் சசிகலா.. இந்த கடிதத்தைத்தான் "தூதர்" மூலம் அமித்ஷாவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளாராம்.
திவாகரன்: சில மாதங்களாகவே, தினசரி செலவுக்கு கூட போதிய பணம் இல்லாமல் அவதியுறுகிறாராம் சசிகலா.. அவரது சகோதரர் திவாகரன் தான், அவ்வப்போது குறிப்பிட்ட அளவில் பணம் கொடுத்து வந்திருக்கிறார். சமீபத்தில் அவரும், அந்த பணம் தருவதை நிறுத்திவிட்டாராம்.. இதனால், தேவையான அளவுக்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறார் சசிகலா என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications