28-ஆ.. சென்னை மெட்ரோவில் தினசரி பயணிப்பவரா நீங்க.. தமிழக அரசு வெளியிட்ட மேஜர் குட்நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் ரயில்கள் கிடைக்க போகின்றன.. ரூ.2,820.90 கோடியில் 28 ரயில் தொடர்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை தற்போது 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழித்தடங்களை ரயில்களை இயக்கி வருகிறது. கோயம்பேடு வடபழனி வழித்தடத்திலும், சைதாப்பேட்டை தேனாம்பேட்டை வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் தற்போது கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் முடிந்து மெட்ரோ ரயில் வரும் 2026 முதல் 2028க்குள் சென்னை முழுவதும் மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கிவிடும். இந்நிலையில் ரூ.2,820.90 கோடியில் 28 ரயில் தொடர்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-I (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம்-I இன் இயக்கத்திற்காக 4 பெட்டிகளுடன் கூடிய 52 ரயில் தொடர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே கொள்முதல் செய்திருந்தது.
முற்பகல் உச்ச சேவைகள் காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் உச்ச சேவைகள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலுமாக, தற்போது ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் (அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை) ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இயக்கத்திற்காக இருப்பில் வைக்கப்படும் இரண்டு ரயில் தொடர்களையும் சேர்த்து மொத்தம் 45 ரயில் தொடர்கள் வாராந்திர உச்ச நேர இயக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-I இன் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028 ஆம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவிற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கருத்துரு மத்திய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும்." இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications