சென்னை பீச் டூ எழும்பூர்.. நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்.. அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை (அக்டோபர் 27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள மின்சார ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் வேலைக்குச் செல்வதற்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். சென்ட்ரல் ஆவடி, வேளச்சேரி, பீச் - தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட செல்லும் வழிகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்கள் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணியில் இருந்து 20 நிமிட இடைவெளியில் 23 சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
இதைத்தொடர்ந்து, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை (அக்டோபர் 27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்ட்டில் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம்-செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் அக்டோபர் 27 ஆம் தேதியன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.
நாளை கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications