ஆட்டோ, பைக் ஓட்டிகள்.. சென்னை போக்குவரத்து போலீசாருக்கு கூடுதல் ஆணையர் முக்கிய உத்தரவு
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பல்வேறு திட்டங்களை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் போலீசாருக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாகனங்கள் உள்ள நகரம் என்றால் அது சென்னை தான்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புதிதாக பதிவாகி வருகின்றன. ஆனால் இந்த வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலைகள் போதுமா என்றால் நிச்சயம் போதாது. இது ஒருபுறம் எனில் மெட்ரோ ரயில்பணி, மழைநீர் வடிகால்வாய் பணி, மின் வாரிய கேபிள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை அமைக்கும் பணி என சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு குறுகிய நிலையில் சாலைகள் இருக்கின்றன.

இதன் காரணமாக வாகனங்களால் வழக்கமான வேகத்தில் கூட செல்ல முடியாத சூழல் சென்னையில் நிலவுகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் சென்னை போக்குவரத்து போலீசார், ஒருவழிப்பாதை, சுற்றுவழிப்பாதை, பக்கத்தில் இரு சாலைகள் இருந்தால் வாகனங்களை மாற்றிவிடுவது, ஒருவேளை அதுவும் முடியாத நிலை ஏற்பட்டால், யூடர்ன் அமைப்பது, சில இடங்களில் யூடர்ன்களைதடுப்பது என்று பல விஷயங்களை செய்து, வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கையை தினசரி கண்காணித்து, போக்குவரத்து மாற்றங்களை போலீசார் செய்து வருகிறார்கள் . எந்த சிக்னல்களில் எவ்வளவு வாகனங்கள் நிற்கின்றன என்பதை கண்காணித்து, அதற்கு தகுந்தாற் போல் சிக்னல்கள் நேரத்தை மாற்றி அமைத்தும் போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகிறார்கள். அதனால் தான் சில சிக்னல்கள் அதிக நேரம் நிற்கவேண்டிய நிலை இருக்கிறது.சில சிக்னல்கள் மூன்று முதல் 5 நிமிடம் வரை கூட நிற்க வேண்டிய நிலைக்கு இதுவே காரணமாக உள்ளது.
இந்த சூழிலில் சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் முதல் இணை ஆணையர்கள் வரையிலான போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கியமான உத்தரவுகளை அவர் பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி போக்குவரத்து போலீசார், அரசு பஸ்கள், ஆட்டோக்கள், பைக்குகள் போன்ற ரோட்டில் ஒழுங்கற்று சென்றால் அவற்றை உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும். பஸ்களை பொறுத்தவரை, பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் வகையில் நகர் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணியால் சாலைகள் குறுகலாக உள்ளது. எனவே அந்த பகுதியில் தேவையான மாற்றங்கள் செய்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். போக்குவரத்து போலீஸார் யாராவது லஞ்சம் வாங்கியது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் போக்குவரத்து விதிகளை யாரும் மீறக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும் போது, போக்குவரத்து விதிகளை யாரும் மீறக்கூடாது என்பதே போக்குவரத்து போலீசாரின் கனவு என்று தெரிவித்தார். மேலும் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் ஹெல்மட் அணிந்து செல்கிறார்கள். பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது என்றார்.
தனக்கு சாலை விபத்தின் வலி நன்றாக தெரியும் என்று கூறிய சுதாகர், எனது தந்தையை இழந்தது சாலை விபத்தில் தான் இழந்தேன். ஹெல்மெட் அணியாமல் போனதால் தான் அவர் இறந்துபோனார் என்று கலங்கியபடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications