இனி நெரிசல் இல்லாமல் போகலாம்! தென் மாவட்ட பயணிகளுக்கு 'ஸ்வீட்' அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே!
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும் நிலையில், பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
பணி நிமித்தமாகவும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சென்னையிலே செட்டில் ஆன வெளி மாவட்ட மக்கள் கூட சொந்த ஊர்களில் வரும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு தவறாமல் பங்கேற்க செல்வதை பார்க்க முடியும்.

இதனால், வார இறுதி நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதை காண முடியும். பண்டிகை நாட்களிலும் ரயில்களில் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு முன்பதிவில்லா பெட்டிகளில் இருப்பதை காண முடியும்.
நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் சாதாரண நாட்களிலேயே அலைமோதும். ஆனால், பண்டிகை மற்றும் விடுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களுக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விடும்.
இதுபோன்ற சூழல் தான் தென் மாவட்ட ரயில்களில் காணமுடிகிறது. எனவே தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. வந்தே பாரத் ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எப்போது முதல் இயக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் அசத்தலான ஒரு அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதாவது, தென் மாவட்ட மக்கள் அதிகம் பயணிக்கும் சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையேயான குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக 2 ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியும் 2-ஆம் வகுப்பு அமரும் வசதி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 21 ல் இருந்து 23 ஆக அதிகரித்துள்ளது.
இரு மார்க்கங்களிலும் இன்று முதல் இரண்டு பெட்டிகளும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சில ரயில்களிலும் கூடுதல் பெட்டியை இணைக்க முன் வர வேண்டும் என்றும் பயணிகள் விடுக்கும் கோரிக்கையாக உள்ளது. அதேபோல வந்தே பாரத் ரயிலும் விரைவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications