தேனி பெண் பெயரில் ரூ.500 கோடி சொத்து.. ஏடிஜிபி ஜெயராமன் கைது பின்னணி.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக பணியில் இருந்த காவல்துறை ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு பின்னணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஜயஸ்ரீ மற்றும் தனுஷ் ஆகியோரின் காதல் திருமணம் இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தேனியைச் சேர்ந்த பெண்ணான விஜயஸ்ரீ பெயரில் ரூ.500 கோடி சொத்து இருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் காதலனை விஜயஸ்ரீ தேடி வந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

ரூ.500 கோடி சொத்து
தேனியைச் சேர்ந்த பெண்ணான விஜயஸ்ரீ பெயரில் ரூ.500 கோடி சொத்து இருந்திருக்கிறது. அதனை விட்டுவிட்டு விஜயஸ்ரீ காதலனான தனுஷை திருமணம் செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணின் தந்தை வனராஜா, வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இதன்பின் இரு தரப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், விஜயஸ்ரீ தனக்கு எந்த சொத்தும் வேண்டாம்.
சிறுவன் கடத்தல்
எந்த காரணத்திற்காகவும் வீட்டிற்கு வர மாட்டேன் என்று எழுதி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பெண் குடும்பத்தினர், காதல் ஜோடியை தேடி வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை என்பதால், உடனடியாக தனுஷின் சகோதரரை கடத்தி இருக்கின்றனர். இந்த கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமனின் வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தேனி பெண்ணின் தந்தை கைது
இதன்பின் வழக்கின் விசாரணையில் பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத் குமார், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்திருக்கின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்திருக்கிறது. அதாவது பெண்ணின் தந்தை வனராஜா, தனது பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பி இருக்கிறார்.
சிக்கிய சிசிடிவி காட்சிகள்
இதனால் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து நீக்கப்பட்ட முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரியை அணுகி இருக்கிறார். மகேஸ்வரி மூலமாக ஏடிஜிபி ஜெயராமனை அணுகி இருக்கின்றனர். இதன்பின்னர் ஏடிஜிபி ஜெயராமன் தனது சைரன் வைத்த காரில் பெண்ணின் தந்தையுடன் சென்று ஹோட்டலில் இருந்த எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியை சந்தித்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஆதாரத்தின் அடிப்படையில் கைது
இந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றத்திலும் ஏடிஜிபி ஜெயராமனை நீதிபதி கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஏடிஜிபி ஜெயராமன் தொடர்பாக முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி மற்றும் சரத் குமார் ஆகியோர் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஓராண்டில் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜெயராமன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications