‘உங்க அமைச்சர் பதவிக்கு காரணமே அம்பேத்கர் தான்’.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜுனா கண்டனம்
சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, "அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம்" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அரசியல் சாசனம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவையிலும் விவாதம் நடைபெற்றது. மக்களவை விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவை விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளித்தனர். அப்போது அமித்ஷாவுடைய பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

அமித்ஷா பேசும்போது, "தற்போதைய அரசியலில் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும். இருப்பினும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும்." என்றார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அமித்ஷாவை மன்னிப்பு கேட்க சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெளிநடப்பு செய்வது, தீர்மானம் கொண்டு வருவது என்று தங்களின் கண்டனத்தால் நாடாளுமன்றத்தையே முடக்கி வருகிறார்கள். "மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புரட்சியாளர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தான் அவமதித்தது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதைத்தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை திசை திருப்புகிறார்கள்." என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக அம்பேத்கர் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வருகிறது. "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்." என்ற புத்தகம் வெளியீடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பிரச்னை குறித்து வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பு தலைவரும், விசிக முன்னாள் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.
அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது.
கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும். ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும், எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம். எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications