தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆதவ் அர்ஜுனா ஆப்சென்ட்.. விஜய்யுடன் இல்லை.. எக்ஸ் தளத்தில் அப்டேட்!
சென்னை: "மக்கள் துணையுடன், தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்." என தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா ஜனவரி 31 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரிவு மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
இந்நிலையில் இன்று நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு இன்று பனையூரில் தவெகவின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதையொட்டி, இன்று கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய்.
இந்த நிகழ்வில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும், தலைமைக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால். தவெகவில் அண்மையில் இணைந்து தேர்தல் பிரிவு மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆன ஆதவ் அர்ஜுனா இன்றைய நிகழ்வில் பங்கேற்கவில்லை.
ஆதவ் அர்ஜுனா பங்கேற்கவில்லை
உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றுள்ளார் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனா. எனவே, இன்று பனையூரில் நடைபெற்ற தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும் இதுதொடர்பான செய்தியை தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜுனா லேட்டஸ்ட் பதிவு
ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.
மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டு காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் கடிதம்
முன்னதாக தவெக தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான். கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications