நீங்க என்ன தூக்குறது? நானே போறேன்! விசிகவை விட்டு விலகும் ஆதவ் அர்ஜுனா? ’அந்த’ கட்சியில் ஐக்கியம்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியது தமிழக அளவில் பேசு பொருளாகியிருக்கும் நிலையில், அதற்கு இணையாக விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர் விசிகவில் இருந்து திருமாவளவனால் விலக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அவரே கட்சியிலிருந்து விலகி, விஜய்யின் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.
'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்பது போல இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள்.

இந்திய அளவில் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான லாட்டரி அதிபர் மார்ட்டினின் உறவினரான ஆதவ் அர்ஜுனா, ஏற்கனவே பல்வேறு தேர்தல் வியூகங்களில் பங்கேற்றிருக்கிறார்.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டிலிருந்து திமுகவுக்காக வேலை பார்த்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது மேற்கொண்ட நமக்கு நாமே பயணம், அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டங்கள் என ஆதவ் அர்ஜுனாவின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததும் ஆதவ் அர்ஜுனா தான். திமுக தலைமையின் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்த அவர் திடீரென அரசியலில் குதித்தார்.
அதிமுக, திமுகவில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். எடுத்த எடுப்பிலேயே அவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் கட்சியின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் சமூக வலைதள பக்க ஹேண்டில்களின் பொறுப்பும் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் வசம் வந்தது.
அதே நேரத்தில் கட்சியில் இருந்த மற்ற சீனியர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறிது காலம் அமைதியாக இருந்த ஆதவ் திடீரென கூட்டணி ஆட்சியில் பங்கு முதலமைச்சராக திருமாவளவன் என கூட்டணி கூட்டில் கல் எறிந்தார். அதனை அவரது கட்சியினரே ரசிக்கவில்லை. அதற்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்து இருந்தார். இப்படியாக முதன்முறையாக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு கூட்டணியிலும் பெரும் புயலை கிளப்பியது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு.
தொடர்ந்து விஜய் கட்சிக்கு ஆதரவாகவே ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வந்தார். உச்சமாக அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் திருமாவளவன் பங்கேற்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. திமுகவின் அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் பங்கேற்கவில்லை என பரவலாக பேசப்பட்டது.
இதற்கிடையே நேற்று திட்டமிட்டபடி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக பேசிய அர்ஜுனா,” திருமாவளவனின் மனது முழுவதும் இங்கே தான் இருக்கிறது என பேசியதோடு திமுகவை நேரடியாக தாக்கும் வகையில் சில விஷயங்களை குறிப்பிட்டார். பிறப்பால் ஒருவர் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடாது, தமிழகத்தில் 2026ல் மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், ஒரு குடும்பம் திரை உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என பேசியது, திமுக மற்றும் அதன் குடும்பத்தினரை தாக்கும் வகையில் இருந்தது.
தொடர்ந்து பேசிய விஜய் திருமாவளவனுக்கு திமுக கூட்டணி கட்சிகள் அழுத்தம் தருவதாக பேசினாலும். அதனை திருமாவளவன் மறுத்தார். இதற்கிடையே ஆதவ் அர்ஜுனா பேசி முடித்த சில நிமிடங்களில் திமுக எம்பி ரவிக்குமார், எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், சங்கத்தமிழன் உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் பேட்டிகளிலும் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறுதியாக திருமாவளவன் அர்ஜுனாவின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை திமுக கூட்டணியை உடைக்கும் வகையில் 100% அவர்கள் செயல்பாடு இருக்கிறது என பேசி இருந்தார். மேலும் கட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறுகின்றார். இதற்கிடையே ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல் உலாவியது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திருமாவளவன் அந்த அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இதெல்லாம் ஏற்கனவே தான் கணித்தது தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக தானே விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தானே இணைந்து கொள்ள ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாகவும் கட்சியில் தனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்குவதற்காகவே இவ்வளவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பயணித்ததாகவும், இன்னும் ஓரிரு நாளில் தமிழக வெற்றிக் கழகத்தில் தானே இணைய போகிறேன் என அவரது ஆதரவாளர்களிடம் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் உலாவி வருகிறது. விரைவில் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணையலாம் எனவும் கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் வியூக குழுவில் இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications