அடுத்த 4 மாதங்களில் தேர்தல்! அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதிகள் என்னென்ன? முழு தகவல்
சென்னை: அதிமுகவுக்கு புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கான தகுதிகள் தனியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
அதிமுகவில் கடந்த சில காலமாகவே ஒற்றை தலைமை குறித்த விவாதம் தான் தீவிரமாக உள்ளது. எடப்பாடி தரப்புக்குக் கட்சிக்குள் ஆதரவு அதிகமாகவே உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலேயே இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக
இருப்பினும், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதையடுத்து இன்று வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கொஞ்ச நேரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

16 தீர்மானங்கள்
அதில் பொதுக் குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் பதிலாகத் துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

தேர்தல் அதிகாரிகள்
அனைவரும் எதிர்பார்த்தபடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் இணைந்து பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்கும்படி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன. அடுத்த 4 மாதங்களுக்கு புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என் முடிவு செய்யப்பட்டன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

தகுதிகள்
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோருக்கு சில தகுதிகளும் அறிவிக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தலைமை தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும். மேலும், தலைமை கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செயலாளர்கள்
அதேபோல கட்சி கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை முன்மொழிய வேண்டும். அதேபோல கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை வழிமொழிய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டச் செயலாளர்கள் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே முன்மொழிய அல்லது வழிமொழிய முடியும் என்ற விதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவில் தேர்தல்
அதிமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்த பொதுக்குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களிலேயே பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஓபிஎஸ் போட்டியிடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி!












Click it and Unblock the Notifications