பாஜக சகவாசம்.. கடுப்பான எடப்பாடி! அண்ணாமலையுடன் நெருக்கமான அதிமுக நிர்வாகி கட்சியை விட்டே நீக்கம்
சென்னை: விழுப்புரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வில் பாஜக தலைவர்களோடு கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்து உள்ளார்.
ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் தனியார் பள்ளி சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 39 ஜோடிகளில் தலா ரூ.1 லட்சம் செலவில் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடைபெற்றது. திண்டிவனம் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நேற்று காலை 10:15 மணி முதல் 11:45 மணிவரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜோடிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். இதில் திருமணம் செய்த 39 ஜோடிகள் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பாஜக பிரமுகருமான ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4 கிராம் தங்கத்தாலி, மணமகளுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவை, மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் பட்டு துண்டு ஆகியவை வழங்கப்பட்டன. இதற்காக 10,000 திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பிரமாண்டமாக விழா நடைபெற்றது.
இதில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் பேசிய அண்ணாமலை, தம்பதிகள் அனைவருக்கும் அனைத்து வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்தினார். இவ்விழாவில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்ற ரகுராமனும் கலந்துகொண்டதாக செய்திகளில் புகைப்படங்களுடன் தகவல் வெளியானது. இதுதான் எடப்பாடி பழனிசாமியை ஆத்திரமடைய செய்து இருக்கிறது. காரணம், இவர் அதிமுக நிர்வாகியாவார். விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராக பதவி வகித்து வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான
வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. முரளி (எ) ரகுராமன், (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications