அதிமுக யார் கையில்... பொதுக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்த பனிப்போர்
சென்னை: அதிமுகவுக்கு யார் தலைமைதாங்குவது என்ற விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுவது நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒற்றுமையோடு இருக்கிறோம் என அதிமுக சீனியர்கள் ஊடகங்களில் பேட்டியளித்தாலும், உள்விவகாரம் அவர்களை பெரியளவில் கவலைக்கொள்ளச் செய்துள்ளதாம்.
குறிப்பாக கே.பி.முனுசாமி, மதுசூதணன் போன்றோர் அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகளை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தார்களாம்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.குரல்
அதிமுக பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் அருகருகே அமராமல் அவர்களுக்கு மத்தியில் மதுசூதணனை அமர வைத்திருந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் குரலாக அமைச்சர் தங்கமணியும், ஓ.பன்னீர்செல்வம் குரலாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் பொதுக்குழுவில் சில விஷயங்கள் பேசினர்.

234 தொகுதிகள்
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதை எடப்பாடி பழனிசாமி கைகளில் ஒப்படைப்போம் என அமைச்சர் தங்கமணி பேசினார். அதவாது மீண்டும் எடப்பாடியார் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை சூசகமாக உணர்த்தினார்.

மரியாதை
அமைச்சர் தங்கமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டுத்தலைமையில் இயங்குகிறது, கூட்டுத்தலைமை என்பது கூரிய கத்தியை போன்றது அதை கவனமாக பயன்படுத்த வேண்டும் என பொடி வைத்தார். மேலும், ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் சமமாக மரியாதை தர வேண்டும் என வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார். இதன்மூலம் ஓ.பி.எஸ்.க்கு கட்சியினர் அளிக்கும் மரியாதை குறைந்துவிட்டது என்பதை உணர்த்தியுள்ளார்.

நிர்வாகிகள் புலம்பல்
பொதுக்குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர், யாருக்கு தான் நாம மரியாதை தருவது, யார் பக்கம் தான் நிற்பது என ரொம்பவே நொந்துகொண்டனர். மேலும், அவர்கள் கார் ஏறி அங்கிருந்து புறப்படும் வரை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பனிப்போரை பற்றி வெளிப்படையாகவே விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications