"ஈரோடு வெற்றிக்கு முத்தாய்ப்பான தீர்ப்பு!" மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை கேளுங்க! ஆஹா
அதிமுக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக சுப்ரீம் கோட்டில் தீர்ப்பு வந்துள்ளது. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், இது ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிரொலிக்கும் என்று மாஜி அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது ஆதரவாளர்களும் இந்த பொதுக்குழுவில் தான் நீக்கப்பட்டனர். இருப்பினும், இந்த பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு முதலில் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது.

எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு
இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விஜயபாஸ்கர்
இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து செய்தி சேனல் என்றுக்கு மாஜி அமைச்சர் சி விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியான தீர்ப்பு.. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறார்கள். ஈரோடு வெற்றிக்கு முத்தாய்ப்பான தீர்ப்பு அமைந்துள்ளது.

வரலாற்றில் மகத்தான தீர்ப்பு
இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாகச் சொல்லியுள்ளது. இந்த பொதுக்குழுவில் தான் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அதாவது ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இனிமேல் அவர்களால் கட்சியில் எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் கோர முடியாது. எனவே, இந்த தீர்ப்பு அதிமுக வரலாற்றில் மகத்தான ஒரு தீர்ப்பாக உள்ளது.

ஈரோடு கிழக்கு
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் இப்போது மூன்றாவது தலைமுறையாக ஒரு சாமானியர் தலைமையில் இனி அதிமுக விறுநடை போடும். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படும். எங்களுக்குத் தான் இரட்டை இலையை வழங்க வேண்டும் என்று முதலில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலையே நாங்கள் முக்கியமானதாகப் பார்த்தோம். ஈரோடு கிழக்கில், களத்தில், திமுகவுக்கு எதிரான மனநிலை இரட்டை இலைக்கு ஆதரவான மனநிலை இருந்தது. இதை நாங்கள் இரண்டாவது வெற்றியாகப் பார்க்கிறோம்.

ஒன்றுபட்ட அதிமுக
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு.. எங்களை ஊக்குவித்துள்ளது மட்டுமில்லை.. பொதுமக்கள் பார்வையில் இப்போது அதிமுக ஒன்றுபட்டு எடப்பாடி தலைமையில் வலிமைப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆளும் கட்சி எதிராக.... வரும் காலத்தில் ஆட்சியை அமைக்கக் கூடிய ஒரு இயக்கமாக அதிமுக உள்ளது என்பதையே இது பொது வாக்காளர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications