காத்திருக்கும் மெகா "ட்விஸ்ட்"? திருப்பம் தருமா எடப்பாடியின் திட்டம்! கோர்டில் நாளை விசாரணை
சென்னை: அதிமுக உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை விவகாரத்தில் உறுதியாக உள்ளார்.
Recommended Video
அதிமுக உட்கட்சி விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கீழ் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக சென்றது.
இருப்பினும், அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சியையும் இழந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் ஒற்றை தலைமை தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக
கடந்த ஜூலை 11இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்தப் பொதுக்குழுவுக்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை முக்கிய தீர்ப்பை அளித்தது.

உத்தரவு
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்ற நீதிபதி, அதாவது ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். இது மட்டுமின்றி ஜூலை 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார். இதனால் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ்
அதற்கு மறுநாளே செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு, அனைவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என அழைப்பு விடுத்தார். எடப்பாடி பழனிசாமியை அன்பு சகோதரர் எனக் குறிப்பிட்ட ஓபிஎஸ், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது என்றும் அதிமுக தொண்டர்கள் விருப்பப்படி எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றார்.

எடப்பாடி பழனிசாமி
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, திமுக உடன் ஓபிஎஸ் தொடர்பில் வைத்துக் கொள்வதாகவும் அப்படிப்பட்ட ஒருவருடன் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் இணைப்பிற்குத் தயார் எனப் பேட்டி அளிக்கும் போது, அதாவது கடந்த 18ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. எடப்பாடி ஒற்றை தலைமை விவகாரத்தில் உறுதியாக இருப்பதாகவும் அடுத்தகட்ட திட்டங்கள் அதை நோக்கியே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேல்முறையீடு
இந்த மேல்முறையீட்டுக் கோரிக்கையை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு வழக்கறிஞர் விஜய் நாராயண் வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதை மனுவாகத் தாக்கல் செய்தால் திங்களன்று வழக்கை விசாரிப்பதாகக் கூறினர். அதன்படி எடப்பாடி தரப்பில் இது மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

நாளை விசாரணை
மேலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்படாமல் இருக்கும் போது, தனி நீதிபதி இருவரும் இணைந்தே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளை காலை 11 மணி அளவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications