கஜா புயல் நிவாரண நிதி.. அதிமுக ரூ.1 கோடி.. முதல்வரிடம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: அதிமுக சார்பில் கஜா புயல் நிவாரணப் பணிக்கு ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியிடம் அதற்கான காசோலையை வழங்கினார் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
கடந்த 15-ம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல ஏக்கரிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. கண் முன்னே விவசாயம் நாசமானதை கண்டு, மனம் வெதும்பி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்வுகளும் நடந்தன.
டெல்டா பகுதியை மீட்டெடுக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், ரூ.1 கோடி நிவாரண நிதியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினர்.
புயல் பாதித்து 12 நாட்கள் ஆகியும், சீரமைப்ப பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. மேலும், ரயில் மூலம் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதே போல் தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.