வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி அரசு.. ஜெயிக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் மா.செ.க்கள்
Recommended Video

சென்னை: ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலுடன், 18 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலையும் அதிமுக சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே ஆட்சியில் தொடர முடியும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு அளித்ததால் பதவி இழந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலுடன், 18 தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 18ம் தேதி இரு தேர்தலும் நடைபெற உள்ளது.
இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக, திமுக கட்சிகள் அறிவித்துவிட்டன. அமமுக மட்டும் இன்னும் 9 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியில் எடப்பாடி?
18 தொகுதிகளுக்கு நடக்க உள்ள இந்த தேர்தல் மினி சட்டமன்ற தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதில் வென்றால் ஆட்சிப்பொறுப்பில் தொடரலாம், இல்லையேல் காட்சிபொருளாக வெளியேற வேண்டும் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் நெருக்கடியில் உள்ளார்.

அள்ளிதரும் மா.செ.க்கள்
சுமார் 8 ஆண்டுகளாக அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்று, பலன் அடைந்து வந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், தங்கள் கட்சி ஆட்சியில் தொடர நிச்சயம் தாராளமாக பணத்தை செலவு செய்வார்கள். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் செலவுக்கு கவலைப்பட அவசியம் இருக்காது.

பலமான திமுக வேட்பாளர்கள்
இடைத்தேர்தலில் வென்றால் தான் முதல்வராக முடியும் என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்தமுறை 18 தொகுதியிலும் பலமான வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளார். இவர்கள் வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கக்கூடியவர்கள். யாரேனும் உள்ளடி வேலைகள் செய்தால் நிச்சயம் ஸ்டாலின் தொலைத்து விடுவார். இதனால் திமுகவிடம் இருந்து அதிமுக கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பீதியில் மா.செ.க்கள்
இந்த 18 தொகுதி இடைத்தேர்தல் தான் தனது முகவரியை தீர்மானிக்கு என்பதால் வெற்றிக்காக தினகரன் பணத்தை செலவழிப்பதை தாண்டி, ஆர்கே நகர் பார்முலாவைப் போல் பல வியூங்களை வகுப்பார். இதை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தினகரனால் ஓட்டுக்கள் பிரியும் என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் தினகரனால் பீதியில் இருக்கிறார்கள்.

அதிர்ச்சியில் மா.செ.க்கள்
18 தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வென்றே ஆக வேண்டும். ஒரு வேளை தோற்க நேர்ந்தால் , அதற்கு காரணங்களை அறிந்து அந்த மாவட்ட செயலார்களின் பதவியை பறித்துவிடுவேன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கறராக தெரிவித்துள்ளார். இதனால் மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications