முதலமைச்சருங்கிறதையே மறந்துட்டு யூடியூபர் மாதிரி பேசுறாரு ஸ்டாலின்.. வறுத்தெடுத்த ஜெயக்குமார்!
சென்னை: தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து யூ டியூபர் போல ஸ்டாலின் பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பச்சைமால் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்ச உணர்வுடன், மனக் குமுறலுடன் வாழ்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளை பெற திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர்.
1998 குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறுபான்மை மக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பதவிதான் திமுகவின் பிரதான குறிக்கோள். மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் அவர்களுக்கு கவலையில்லை. சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள்.
தேர்தல் நேரங்களில் மட்டுமே நீட் தேர்வை கையில் எடுக்கும் திமுக இன்று வரை நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று பொய் வாக்குறுதி அளித்து திமுக ஓட்டு வாங்கியது. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
ஒருவர் முட்டையை கையிலெடுத்துள்ளார். கூமுட்டைகள்தான் முட்டை எடுத்து காண்பிப்பார்கள். தேர்தலில் திமுகவுக்கு முட்டைதான். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாங்குகளை வாங்கிவிட்டு, இப்போது அனைவரிடம் கையெழுத்து கேட்கின்றனர். ஸ்டாலினும், உதவாநிதியும் மக்களை திசைதிருப்புகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்து விட்டு தற்போது அதில் பல நிபந்தனைகளை விதித்து மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டாது. தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்துவிட்டு யூ டியூபர் போல தான் பேசும் கருத்துக்கு லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க பெல் ஐகான் கிளிக் பண்ணுங்க என்று பேசி வருகிறார்." என கிண்டல் செய்துள்ளார்.
அண்மையில், திமுக ஐடி விங் சார்பில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், "நான் சொல்லும் செய்திகளை லைக் செய்தால் மட்டும் போதாது, ஷேர் செய்ய வேண்டும்" என்று பேசியிருந்தார். அதனை விமர்சித்தே, முதல்வர் ஸ்டாலின் யூடியூபர் போல பேசிக்கொண்டிருப்பதாக ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications