இப்படியெல்லாம் நடக்கும்னு விஜய்,அஜீத்துக்கு தெரியும்.. அதனால் தான் அவங்க போகல! அதிமுக டபுள் கோல்!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் விஜய், அஜீத் ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தால் ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்டிருப்பார்கள் என அதிமுக விமர்சித்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், என பல சங்கங்கள் ஒன்று சேர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி ''கலைஞர் 100'' கலைவிழா நிகழ்ச்சியை சனிக்கிழமை மாலை சென்னையில் நடத்தியது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பலர் கலந்துகொண்ட நிலையில் நடிகர்கள் விஜய், அஜீத் ஆகிய இருவருமே விழாவை புறக்கணித்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் மட்டும் அந்த விழாவுக்கு சென்றிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
''புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று! ''
''புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும், தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர்.
அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது! அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார். ''
''சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். '' இவ்வாறு ஜெயக்குமார் விடுத்துள்ள அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications