"எனக்கு பயந்துதான் ஈபிஎஸ் அந்த விதியை கொண்டு வரவில்லை".. மாஜி எம்.பி கே.சி.பழனிசாமி சுளீர்!
ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என தேர்தல் ஆணைய முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார் கேசி பழனிச்சாமி.
சென்னை : சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு, அதிமுக விவகாரத்திலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், "உச்ச நீதிமன்றம் செல்லும்போது இந்த வழக்கு தீர்ப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக விவகாரத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, சிவ சேனா வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயரும், சின்னமும் யாருக்கு என்பதை தீர்மானிக்க, சிவசேனா விவகாரத்தைப் போலவே பெரும்பான்மை சோதனை முறையை தேர்தல் ஆணையம் கையில் எடுத்தால், அது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முக்கியமாக கருத்தில் கொண்டிருப்பது சிவசேனாவின் எம்.பி, எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு என்பதைத்தான்.

அதிமுக - சிவசேனா
தமிழ்நாட்டில் அதிமுக கட்சியும், அதிமுக சின்னமும் எங்களுக்குத் தான் சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கும் மோதல் போலவே, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், கட்சியும், சின்னமும் யாருக்கு என்ற போட்டி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே நிகழ்ந்து வருகிறது. சிவசேனா கட்சி மற்றும் அக்கட்சியின் வில் அம்பு சின்னத்திற்காக ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது. இதையடுத்து சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஷிண்டேவுக்கு சிவசேனா
சிவசேனா கட்சியில் இருக்கும் 55 எம்.எல்.ஏக்களில் 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவிற்கு தான் ஆதரவு அளிப்பதாலும், கட்சி அமைப்புகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவு குறித்த ஆவணங்களின் அடிப்படையிலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா எனவும், அவர்களுக்கே கட்சியி வில் அம்பு சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு என்பது ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் பக்கம் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் உரிமையில்லை
அதாவது சிவசேனா சார்பில் 55 பேர் எம்எல்ஏக்களான நிலையில் இதில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியிலும், 15 பேர் உத்தவ் தாக்கரேவுடனும் உள்ளனர். சிவசேனா கட்சியின் 18 எம்பிக்களில் 13 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடனும், 5 பேர் உத்தவ் தாக்கரே உடனும் உள்ளனர். இந்த எம்எல்ஏ, எம்பி மற்றும் தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதில் உத்தவ் தாக்கரேவை விட ஏக்நாத் ஷிண்டே தான் முன்னணியில் இருந்தது. அதன் அடிப்படையில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கே என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிவசேனாவை உருவாக்கிய பால் தாக்கரேவின் மகனுக்கே அக்கட்சியில் உரிமையில்லை என்கிற நிலை மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்?
இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் அதிமுகவிலும் இதுபோன்ற ஒரு சூழல் தான் நிகழ்ந்து வருவதால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அதிமுகவில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் பக்கம் தான் எம்.பி, எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். இதனால் சிவசேனா கட்சி சந்தித்த நிலையை அதிமுக எட்டினால் அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு திருத்தப்படும்
அவர் கூறுகையில், "தேர்தல் ஆணையம் இதில் அடிப்படையாகக் கொள்வது 70களில் வந்த சாதிக் அலி வழக்கு. அந்த வழக்கை இன்றைக்கு பொருத்திப் பார்த்தால், மாநிலங்களில் இருக்கும் கட்சிகளை தொழிலதிபர்கள் வாங்கும் நிலை ஏற்படும். எம்.எல்.ஏ, எம்.பிக்களை தொழிலதிபர்கள் வாங்கி, அவர்களே கட்சிகளை வைத்திருப்பார்கள். இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரான செயல். உச்ச நீதிமன்றம் சாதிக் அலி வழக்கை மறுபரிசீலனை செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். உச்ச நீதிமன்றம் செல்லும்போது இந்த வழக்கு தீர்ப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடிப்படை தொண்டர்களால்
அதிமுக 2017 தேர்தல் வழக்கைப் பொறுத்தவரை, ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்த தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுங்கள்; ஆனால், அடிப்படைத் தொண்டர்களால் தான் அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற விதி திருத்தத்தை ஏற்கக்கூடாது என அன்றே நான் தேர்தல் ஆணையத்தில் ஆட்சேபனை மனுவைக் கொடுத்தேன். நீதிபதி சிஸ்தானி, என்னுடைய வாதத்தின் அடிப்படையில் தான் உத்தரவிட்டார். அதைச் செயல்படுத்தக் கோரி நான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் அதில் இன்று வரை பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை.

பழனிசாமி என்ற பெயர் இருப்பவர் தான்
அந்த வழக்கின் அழுத்தத்தில், தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படும் என விதியை ஈபிஎஸ், ஓபிஎஸ் மாற்றிவிட்டனர். அடிப்படை உறுப்பினர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை இன்று ஈபிஎஸ் ஒப்புக்கொள்கிறார். அவர் போட்டிருக்கும் நிபந்தனை 10 மா.செக்கள் முன்மொழிய வேண்டும், 10 மா.செக்கள் வழிமொழிய வேண்டும், 10 ஆண்டு காலம் தலைமைக் கழகத்தில் பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் என்ற விதிகளைச் சேர்க்கிறார். பழனிசாமி என்ற பெயர் உள்ளவர் தான் தலைமைப் பதவியில் இருக்கவேண்டும் என்று மட்டும்தான் விதி இல்லை. அதுவும் எனக்கு பயந்துகொண்டு தான் அவர் போடவில்லை." எனத் தெரிவித்துள்ளார் கே.சி.பழனிசாமி.












Click it and Unblock the Notifications