எம்ஜிஆர் நினைவு தினம்.. மெரினாவில் இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை..மோதலால் தனித்தனியே நேரம் ஒதுக்கீடு
சென்னை: அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இவர்கள் அஞ்சலி செலுத்த தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட எம்ஜிஆர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இவரது கதைத்தேர்வு என்பது பாமர மக்கள், ஏழை தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும் பெண்கள் மத்தியிலும் எம்ஜிஆருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இதனால் அவருக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டது.

முதல்வரான எம்ஜிஆர்
இதற்கிடையே தான் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். தொடர்ந்து 2 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பள்ளியில் நடைமுறையில் இருந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி பெரும் வரவேற்பை பெற்றார்.

தலைவர்கள் அஞ்சலி
இந்நிலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் இன்று அதிமுகவினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் கருப்பு சட்டை அணிந்து வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு காலை 11 மணிக்கு பன்னீர்செல்வம், மதியம் 12 மணிக்கு சசிகலா, மதியம்12.30 மணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

1987 ல் மறைந்த எம்ஜிஆர்
இந்நிலையில் தான் எம்ஜிஆர் கடந்த 1987 டிசம்பர் 24ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுக விஷயத்தில் தலைவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி என அனைவருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications