அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுங்க.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் ஏமாற்றம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், பாரபட்சமின்றி அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொதுக்குழுவின் கால அட்டவனை வேண்டும் எனக் கூறியதுடன் வழக்கையும் தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டிருந்த 26 கேள்விகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து இன்னும் பதில்வரவில்லை எனத் தெரிவித்தார்.

அரவிந்த்பாண்டியன்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான அரவிந்த்பாண்டியன் பெஞ்சமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பொதுக்குழுவை கூட்ட எப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதோ அதேபோல் பாதுகாப்பு கோரியும் அவர்கள் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என வாதிட்டார். பொதுக்குழுவில் கலந்துகொள்ளவுள்ள மூன்றாவது நபர் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அதனால் பெஞ்சமின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதிட்டார்.

நீதிபதி கேள்வி
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான அரவிந்த் பாண்டியனை குறுக்கிட்ட நீதிபதி, பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா என வினவினார். அதற்கு பதிலளித்த அரவிந்த்பாண்டியன், பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் தான் ஆனால் அதற்காக பாதுகாப்பு கேட்டெல்லாம் அவர் வழக்குத் தொடர முடியாது என மீண்டும் வாதிட்டார்.

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு
இதனிடையே பெஞ்சமின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு 2,600 பேர் வரை வருவார்கள் என்றும் அனைவருக்கும் அடையாள அட்டை வாகன பாஸ் வழங்கப்படும் எனவும் கூறினார். எம்.பி.யாக இருந்தாலும் சரி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி உரிமை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பெஞ்சமின் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி சதீஷ்குமார், அந்த தரப்பு இந்த தரப்பு என பிரித்து பார்க்காமல் எல்லா தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

நீதிபதி உத்தரவு
அதிமுக பொதுக்குழு அட்டவணை ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன் பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பான காவல்துறையின் 26 கேள்விகளுக்கு அதிமுக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications