அதிமுகவை குடைந்த செந்தில் பாலாஜி.. அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி! வேலுமணி ஷாக்!
சென்னை : கோவை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவருமான செந்தில் கார்த்திகேயன் இன்று திமுகவில் இணைந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் செந்தில் கார்த்திகேயன்.
அதிமுகவின் முக்கிய புள்ளிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி குறி வைத்து திமுகவுக்கு இழுத்து வருவது கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மோதல்
அதிமுக உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சி பிளவுபட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ் என தனித் தனி அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார். இதேபோல் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், இன்னொரு முக்கிய புள்ளியும் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக நிர்வாகி
அதிமுக கோவை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருந்தவர் செந்தில் கார்த்திகேயன். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மேயராக வரக்கூடியவர் என்ற நிலையில் செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி கார்த்திகேயன் பெயர் அடிபட்டது.

மேயர் ரேஸில்
கிருபாலினி கார்த்திகேயன் தான் அடுத்த மேயர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதேபோல எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான வடவள்ளி சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவும் அதிமுக சார்பில் கோவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. கடைசியில், செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி கார்த்திகேயன் தோல்வியடைந்தார். கோவை மாநகராட்சியில் அதிக இடங்களை திமுகவே கைப்பற்றியது.

திமுகவில் இணைந்தார்
அதன்பிறகும், செந்தில் கார்த்திகேயன் மற்றும் கிருபாலினி இருவருமே அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் செந்தில் கார்த்திகேயன் இன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் திமுகவில் இணைந்திருக்கிறார் செந்தில் கார்த்திகேயன்.

அதிமுக பிரச்சனை
இதுகுறித்து செந்தில் கார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், "குடும்பத்துடன் திமுகவில் இணைந்திருக்கிறேன். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு எப்படியாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜெயலலலிதா நினைவு நாள் டிசம்பர் 4ஆம் தேதியா, டிசம்பர் 5ஆம் தேதியா என்ற குழப்பம் நிலவுகிறது.

திமுகவே சரியாக இருக்கும்
களத்தில் உள்ள மக்களுடன் பழகுகிறோம். அவர்களின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிவேன். எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. செந்தில் பாலாஜி அண்ணனை எனக்கு முன்பே தெரியும். அவரும் ஒன்றாக பயணிக்கலாம் என அழைப்பு விடுத்தார். எனக்கு நிலையான தலைமை தேவைப்பட்டது. அதற்கு திமுகவே சரியாக இருக்கும் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து
சமீபத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்சின்படி கோவை மாவட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருவது கோவை அதிமுகவினரை கலங்கடித்துள்ளது.












Click it and Unblock the Notifications