Exclusive: ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாவே காரணம்! யாரையும் பார்க்க கூட விடல! உடைத்து பேசும் பொன்னையன்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்தும் சசிகலா குறித்தும் பொன்னையன் சில முக்கிய தகவல்களை ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். பல வாரங்களாகத் தொடரும் இந்தக் குழப்பம் முடிந்த பாடில்லை.

அதிமுக
எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார். இருப்பினும், ஓபிஎஸ் மனக் கசப்புகளை மறந்து அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, சசிகலா மற்றும் டிடிவி தினகரனையும் இணைத்துக் கொள்ளவும் தயார் என அறிவித்துள்ளார். எடப்பாடிக்குப் பதிலடி கொடுக்கவே இருவருடனும் மீண்டும் ஓபிஎஸ் கைகோர்க்க விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.

சசிகலா
ஆனால், இதை அடியோடு மறுக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது. இந்தச் சூழலில் ஒன் இந்தியா தமிழுக்குப் பிரத்தியேகமாகப் பேட்டி அளித்த எடப்பாடி ஆதரவாளர் பொன்னையன், சசிகலா குறித்தும் அவரை ஏன் கட்சியில் சேர்க்க முடியாது என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பொன்னையன்
பொன்னையன் இது குறித்துக் கூறுகையில், "ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சசிகலா அழைப்பை நாங்கள் மறுக்கவில்லை தொண்டர்கள் தான் மறுக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தான் மறுக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் அவருடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்கிறார்கள். தொண்டர்கள் உறுதியாக இருக்கும்போது, அதற்கு மேல் எங்களால் என்ன செய்ய முடியும்.

ஜெயலலிதா
அப்பல்லோ ஹாஸ்பிடல் ஜெயலலிதா இருந்த வீட்டிலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவுக்கு எம்ஜிஆரை அழைத்துச் சென்று வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்தோம். ஆனால் ஜெயலலிதாவுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை தர முடியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு சில மாதங்கள் முன்னாலே பல்வேறு மருத்துவ பிரச்சனைகள் இருந்துள்ளன.

துரோகம்
கிட்னி செயலிழக்கும் அபாயத்துக்குச் சென்றும்கூட ஏன் அவரை சசிகலா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கவில்லை: உடலில் பல மருத்துவ பிரச்சினைகள் இருந்ததால் தான் அவரது வீட்டிலேயே மருத்துவமனை செட்அப் உருவாக்கி இருந்தனர். இத்தனை வசதிகள் இருந்தும் கூட ஜெயலலிதாவுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டு சசிகலாவும் அவரது கணவரும் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்தே அனுப்பப்பட்டனர். இதையும் தொண்டர்கள் யாரும் மறக்கவில்லை.

என்ன செய்து இருக்க வேண்டும்
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் இருந்தவர். இதனால் அவருக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்ட போது அரசு தான் அனைத்து நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். தலைமைச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்தவர்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களைப் பார்த்திருக்க வேண்டும். அல்லது ஆக்டிங் முதல்வர் பொறுப்பில் இருந்த ஓபிஎஸ் தான் இதையெல்லாம் செய்திருக்க வேண்டும்.

காரணம்
ஆனால் ஓ பன்னீர்செல்வம் உட்பட யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கக் கூட இல்லை. நான் உட்பட யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. சசிகலாவை அதிகாரப்பூர்வ காப்பாளர் என்று குறிப்பிட்டு இருந்ததால் மருத்துவர்களும் எங்களிடம் ஏதும் கூறவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் என்ற எண்ணம் கட்சியில் தொண்டர்கள் பலரிடமும் இருக்கிறது.

ஆதரவு அதிகரிக்காது
இதன் காரணமாகவே சசிகலா இயக்கத்தில் இருந்தே நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை. அவர் இங்கு வருவதால் கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கப் போவதில்லை. சொல்லப்போனால் ஜெயலலிதா மீது அன்பு கொண்டவர்களின் ஆதரவு சசிகலாவைச் சேர்த்தால் குறையவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications