காதல் திருமணம் செய்ய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ - பெண்ணின் தந்தை தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க கோரி சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்
சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க கோரிய சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பிரபு - சௌந்தர்யா திருமணம் முடித்ததாக அவர்களின் புகைப்படமும், சௌந்தர்யா வீட்டில் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் பிரபு வீடியோ வெளியிட்டார்.
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை சுவாமிநாதனை பொது இடத்தில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் தன் மகள் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications