"காலை 8 மணிக்கு மேல போனால்.. பால் கிடைப்பதில்லை! அரசு என்ன செய்கிறது!" கடுகடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: ஆவின் பால் விநியோகம் தமிழ்நாட்டில் போதிய அளவு இல்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் பால் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பாலின் விலை சற்று குறைவாக இருக்கும்.
இதனால் ஏழை மக்களின் முதல் சாய்ஸாக ஆவின் பாலே இருக்கும். இந்நிலையில், ஆவின் பால் விநியோகம் மாநிலத்தில் முறையாக இல்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஓ பன்னீர் செல்வம்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பால், சிறப்பு நிலைப்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால் எனப் பல பால் வகையினையும், நெய், வெண்ணெய், தயிர் போன்ற பலவிதமான பால் உபபொருட்களையும் பல்வேறு அளவுகளில் தயாரித்து விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் இதர பால் உபபொருட்களின் விலை வெளிச் சந்தையைவிடக் குறைவு என்பதால், பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஆவின் சாவடிகளை நாடுகின்றனர். தற்போது ஆவின் பால் மற்றும் சில உபபொருட்கள் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அரை லிட்டர் தயிர் விலை 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன. ஐஸ்க்ரீம் வகைகளின் விலையும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனைக் கண்டித்து நான் அறிக்கை விடுத்ததோடு, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

8 மணிக்கு மேல் பால் இல்லை
இந்த நிலையில், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும், சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் தினமும் பணம் கொடுத்து பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய பாக்கெட்கள் இல்லை
இது மட்டுமல்லாமல், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் தற்போது ஆவின் பூத்துகளில் கிடைப்பதில்லை என்றும், 1 கிலோ நெய் தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது என்றும், சில இடங்களில் 500 கிராம் நெய் விற்பனை செய்யப்படுகிறது என்றும், சிறிய அளவிலான பால்கோவா பெரும்பாலான ஆவின் பாலகங்களில் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களால் மொத்தமாக 540 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ நெய்யினை வாங்க இயலாது என்றும், சிறிய அளவிலான நெய் பாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசின் கடமை
பால் விற்பனையின் அளவு சென்ற ஆண்டை விட தற்போது உயர்ந்திருக்கிறது என்று கூறி, இந்தக் குற்றச்சாட்டினை அரசு மறுக்கலாம்.ஆனால், நுகர்வோர்களின் எண்ணிக்கை அதனை விட உயர்ந்துவிட்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆவின் பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்றும், 100 கிராம், 200 கிராம் அளவுகளில் பால் உபபொருட்களான நெய், பால்கோவா போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இந்தக் கோரிக்கையினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

வலியுறுத்தல்
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, பால் வகைகள் அனைத்தையும் தாராளமாக விநியோகம் செய்யவும், சிறிய அளவிலான பால் உபபொருட்கள் பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications