தப்பிய இரட்டை இலை.. காங்கிரஸுக்கு “ஈரோடு ஈசியில்ல” - ஈபிஎஸ் எழுச்சியால் அனல் பறக்கும் தேர்தல் களம்
அதிமுக வேட்பாளர் குறித்த தேர்தல் ஆணையத்தின் முடிவால் இரட்டை இலை சின்னம் முடங்காத நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்று பலரும் கூறிய நிலையில், ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்து, அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேனின் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதன் மூலம் இரட்டை இலை சின்னம் தப்பி இருக்கிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது.

அதிமுகவில் குழப்பம்
அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையிலான பூசல் காரணமாக அக்கட்சி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம்
இந்த நிலையில், உச்சநீதிமன்றமோ அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதற்கான ஆவணங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதத்தில் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
அதில் செந்தில் முருகன் பெயர் இல்லாததற்கு ஓபிஎஸ் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்த நிலையில், தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

தேர்தல் ஆணையம்
அதே நேரம் இன்று தென்னரசுவை வேட்பாளராக ஏற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதத்தை தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். இதற்கிடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், குறுகிய காலத்திற்கு தமிழ்மகன் உசேன் அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடவும் அனுமதித்து ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலருக்கும் கடிதம் எழுதி உள்ளது.

தப்பிய இரட்டை இலை
இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஓபிஎஸ் வசம் இரட்டை இலை சின்னம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது தரப்பும் தேர்தலில் விலகி, தமிழ் மகன் உசேனின் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதால் சின்னம் தப்பி இருக்கிறது.

நேரடி போட்டி
இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த கட்சியும் இதில் போட்டியிடாததுடன், ஓபிஎஸ் தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவளிப்போம் என்று அறிவித்து இருப்பதால் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications