சுனில் நமக்கு சரிபட்டு வருவாரா...? சந்தேகம் எழுப்பும் அதிமுக சீனியர் நிர்வாகிகள்
சென்னை: அதிமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் சுனில் ஒரு காலத்தில் திமுகவுக்காக பணியாற்றியவர் என்பதால் அவரை முழு மனதுடன் சீனியர்கள் பலரும் ஏற்கவில்லை.
இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே தன்னை பொறுத்தவரை இனி திமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என்றும், தன்னை முழுமையாக நம்பலாம் எனவும் அதிமுக தலைமையிடம் விளக்கம் அளித்திருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில்.

திமுக-அதிமுக
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக, அதிமுக, ஆகிய இரு பெரும் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக ஆட்களை நியமனம் செய்துள்ளது. தேசியளவில் தேர்தல் வியூகத்தில் பிரபலமாக விளங்கும் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காகவும், அவரிடம் சிஷ்யராக பணியாற்றி, பின்னர் திமுகவுக்கு வேலை செய்த சுனில் இப்போது அதிமுகவுக்காகவும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இதனை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் திமுக-அதிமுக அதிகார மோதல் என்பதை விட குரு-சிஷ்யர் ஈகோ சண்டை என்றுக் கூட கருதலாம்.

பலத்த சந்தேகம்
சுனிலை அதிமுகவுக்காக பணியாற்ற அனுமதி அளித்து அவருக்கு ஒரு கணிசமான தொகையும் கொடுக்கப்பட்டதற்கு சீனியர் நிர்வாகிகள் பலரும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். சுனில் நமக்கு சரிபட்டு வருவாரா? என்றும், உளவு பார்க்கக்கூட திமுக தரப்பு அனுப்பி வைத்திருக்கும் எனவும் பலத்த சந்தேகம் எழுப்புகின்றனர். இதனிடையே தன்னை நூறு சதவீதம் நம்பலாம் என விளக்கத்திற்கு மேல் விளக்கம் அளித்து இடத்தை தக்கவைத்துக்கொண்டார் சுனில்.

விருப்பமில்லை
இதனிடையே சுனில் விவகாரத்தில் ஓ.பி.எஸ்.தரப்பிற்கும் பல்வேறு ஐயங்கள் உள்ளனவாம். இருப்பினும் அவர்கள் இதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முதற்கட்டமாக தனக்கு தனி அலுவலகம் அமைத்த சுனில், அதிமுக தலைமையிடம் இன்னும் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார். இப்போது முடியாது பிறகு ஏற்பாடு செய்யலாம் எனக் கூறிய அதிமுக தலைமை, தேர்தல் பணிகளை முதலில் தொடங்குங்கள், சமூக வலைதளப் பிரிவினர் செயல்பாட்டை கவனியுங்கள் எனக் கூறியிருக்கிறதாம்.

மனச்சோர்வு
அதிமுகவில் சிலர் தன்னை சந்தேகக் கண்ணோடு பார்ப்பது சுனிலுக்கு மனதளவில் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாம். இருப்பினும் தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் சிலரின் நம்பிக்கையை வீண் செய்யக்கூடாது என்பதற்காக பணியை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளார் சுனில். ஏற்கனவே கூறியிருந்தது போல் சேலம் மாவட்ட கள நிலவரங்கள் குறித்த அறிக்கையை சுனில் டீம் தயார் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications