ஆட்டோவில் பயணம்; சாலையோரக் கடையில் டீ; கேசுவலாக உலா வரும் அதிமுக அவைத்தலைவர்!
சென்னை: அதிமுக செயற்குழு முடிந்த பிறகு அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்ற நிகழ்வு பேசு பொருளாக மாறியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலம் மட்டுமே சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன், ஆட்டோவில் தான் அங்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வாராம்.
சொந்தமாக கார் கூட இல்லாத ஒருவர் கட்சியின் உயர்ந்த பதவியில் அமர்ந்ததன் மூலம் எளியோரும் ஏற்றம் பெறக் கூடிய ஒரே கட்சி அதிமுக என அக்கட்சியின் ஐ.டி.விங் நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்மகன் உசேன் நியமனம்.. ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. சரியான வியூகம்
அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை சாதாரண குப்பனும் சுப்பனும் கூட ஏற்றம் பெற முடியும் என்பது அக்கட்சியின் எழுதப்படாத விதி. ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற ஏராளமான நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறமுடியும். ஓட்டுவீட்டில் வசித்தவர்கள் கூட அதிமுகவில் அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள். இதனால் தான் இத்தனை பஞ்சாயத்துகளுக்கு மத்தியிலும் அதிமுக தொடர்ந்து தனது வலிமையை தக்க வைத்து வருகிறது.
ஜாம்பவான்கள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என புலம்பல் சத்தம் அதிகரித்த வந்த நிலையில், தமிழ்மகன் உசேனை அவைத்தலைவர் பதவியில் அமர வைத்து அதிமுக என்றால் இது தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை, செம்மலை என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லா அவைத்தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் வழக்கம் போல் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டது அதிமுக தலைமை.
ஆட்டோ பயணம்
இதனிடையே அதிமுக செயற்குழுவில் பங்கேற்பதற்காக ஆட்டோ பிடித்து அதிமுக தலைமைக்கழகம் வந்த தமிழ் மகன் உசேன், கூட்டத்துக்கு பிறகு அவைத்தலைவராகவும் ஆட்டோவில் தான் வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக அவரிடம் கார் இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன் அவைத்தலைவராக இருந்த மதுசூதணன் விலை உயர்ந்த கார் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இன்னோவா கார் தமிழ் மகன் உசேனுக்கு கட்சித் தலைமையால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேசுவல்
சென்னையில் மகன் வீடு இருந்தாலும் அவர்களுக்கு பாரம் அளிக்கக் கூடாது என எண்ணி விடுதியில் தங்குவதும் தமிழ் மகன் உசேனுக்கு வழக்கமாகும். தமிழ் மகன் உசேனை பொறுத்தவரை எப்போதும் கேசுவலாக இருக்கக்கூடியவர் என்கிறார்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை தேநீர்கடைக்காரர்கள்.