மிலானி “கனெக்சன்”.. ரவீந்திரநாத் பதவி காலி! எடப்பாடிக்கு ஏன் டென்சன்? அவருக்கு எதிராகவும் வழக்காமே
சென்னை: மிலானி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கின் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத் எம்பி பதவியை இழந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் மிலானி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அது என்ன வழக்கு? விரிவாக காண்போம்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓபி ரவீந்திரநாத். தற்போது இவர் ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் அதிமுக சார்பில் மக்களவைக்கு சென்ற ஒரே ஒரு உறுப்பினர் அவர் மட்டும்தான்.

இந்த நிலையில் இவர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறி அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மிலானி தேனி மாவட்ட திமுகவின் முன்னாள் அமைப்பாளராக பதவி வகித்தவர்.
இவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதில் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் அவகாசம் அளித்து இருக்கிறது.
ஓபி ரவீந்திரநாத்தின் எம்பி பதவியை காலி செய்யும் வகையில் வழக்கு தொடர்ந்த மிலானி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதுவும் ஓ.பி.ரவீந்திரநாத் மீது சுமத்தப்பட்ட புகாரை போன்றுதான். ஈபிஎஸ் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவலை அளித்தாக அவர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-க்கு ஆன்லைன் மூலம் புகாா் மனு ஒன்றை அனுப்பினார்.

அந்த மனுவில், "சட்டப் பேரவைத் தோ்தலின்போது அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-ன் படி தனது வேட்பு மனுவின் பிரமாணப் பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலைத் தெரிவித்து உள்ளார்." என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் 1 நீதிபதி கலைவாணி, "மத்தியக் குற்றப் பிரிவு இந்த மனு குறித்த வழக்கை நோ்மையாக விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியே மிலானி பெயரை உச்சரித்து பேசி இருந்தார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, "சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவில் சொத்துக்களை குறைத்துக் காட்டியதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.
அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் மிலானி என்ற திமுக கட்சியைச் சேர்ந்தவர் மூலமாக என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். சட்டப்படி அதை சந்திப்போம். வருவாய் குறைவாக காட்டியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். என்ன இருக்கிறதோ அதைத் தான் காட்டி உள்ளேன். எந்த தொழிலையும் நான் செய்யவில்லை விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்.
எந்த சொத்தையும் நான் மறைக்கவில்லை. என்னிடம் எந்த சொத்தும் இல்லை. என் பெயரில் எந்த சொத்தையும் நான் வாங்கவில்லை. எந்த விதிமீறல் இருந்தாலும் ஓராண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டு முடியும் நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு.
என் தொகுதியில் உள்ள எடப்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தான் இந்த வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சேலம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்." என்று அவர் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications