எம்ஜிஆர் கொடுத்த செக்கை பெற மறுத்த செங்கோட்டையன்.. 54 ஆண்டுகளாக கட்சியில் இருந்தவரை நீக்கிய எடப்பாடி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எம்ஜிஆர் ஒரு பிளாங்க் செக்கை பொதுக்கூட்ட மேடையிலேயே கொடுத்தார். அதனை வாங்க மறுத்தவர் செங்கோட்டையன். அதிமுக தொடங்கப்பட்டது முதல் 54 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். 10 நாட்கள் கெடு" எனத் தெரிவித்தார். இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் ஒன்றாக சென்று மரியாதை செலுத்தியிருந்த நிலையில், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் கொடுத்த செக்
1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1975 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்ஜிஆரிடம் நற்பெயரைப் பெற்று கவனம் ஈர்த்தார் செங்கோட்டையன். அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததால் மிகவும் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் செங்கோட்டையனுக்கு ஒரு பிளாங்க் செக்கை விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்தார். அதன்பிறகான காலகட்டத்தில் எம்ஜிஆரோடு பிரசாரத்திற்கு செல்வது என்று நெருக்கமானார்.
நீண்ட கால எம்.எல்.ஏ
எம்ஜிஆரின் முதல் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் செங்கோட்டையன். 1980ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார். 1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 1996ல் மட்டும் தோல்வி அடைந்தார். மற்ற அனைத்து முறையும் எம்.எல்.ஏவாக வென்றிருக்கிறார் செங்கோட்டையன்.
தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் வரிசையில், அதிக முறை சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருக்கிறார். இப்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர் தான் செங்கோட்டையன். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்போதும், 2017ல் சசிகலா சிறை செல்ல நேரிடும்போதும் செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டது.
54 ஆண்டுகளாக
கடந்த ஜூலை மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்கியபோதும், ஈரோட்டில் பரப்புரை செய்தபோதும் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன், நேற்று, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் 10 நாட்கள் கெடு என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் செங்கோட்டையன். 1972 ஆம் ஆண்டு முதல் 54 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications